கரூர்: வயிற்று வலி; மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை! -மாடியிலிருந்து விழுந்து இறந்த பார் உரிமையாளர்

மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் பிரேதத்தை உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றி, பிரேத பரிசோதனை அறையில் வைத்ததாக குற்றம்சாட்டுகிறார்கள்.. ஆனால், சரவணகுமாரின் உறவினர்கள், சரவணகுமாரின் சாவில் சந்தேகம் உள்ளது என தெரிவிக்கின்றனர்.
கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வயிற்று வலி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட பார் உரிமையாளரான முன்னாள் ரெளடி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்திருக்கிறார். ஆனால், அவரது உறவினர்கள், 'இந்த சாவில் மர்மம் இருக்கிறது' என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

கரூர் நகர் பகுதியை ஒட்டியுள்ள நீலிமேடு பகுதியைச் சேர்ந்தவர் சரவணகுமார் என்கிற சின்ன ஐஸ்சான் (வயது 42). முன்னாள் ரெளடியான இவர், தற்போது கரூர் வெங்கமேடு உள்ள அரசு மதுபானக் கடையில் பார் உரிமம் எடுத்து நடத்தி வருகிறார். ரெளடியிஸத்தை விட்டு, பார் தொழிலில் மும்முரமாக செயல்பட்டு வந்ததாக கூறப்பட்டது. ஆனால், மதுபோதைக்கு அடிமையான இவருக்கு, தீராத வயிற்று வலி இருந்திருக்கிறது.

திடீரென அவருக்கு வயிற்று வலி அதிகமாக, கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சையில் இருந்துள்ளார். இந்த நிலையில், இன்று காலை 4.45 மணியளவில் புறநோளிகள் பிரிவு உள்ள மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக கூறப்படுகிறது.
மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் காவல்துறைக்கு தகவல் அளிக்காமல் பிரேதத்தை உடனடியாக அவ்விடத்தில் இருந்து அகற்றி, பிரேத பரிசோதனை அறையில் வைத்துள்ளதாக குற்றம்சாட்டுகின்றனர். ஆனால், சரவணகுமாரின் உறவினர்கள், சரவணகுமாரின் சாவில் சந்தேகம் உள்ளது என தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவக்கல்லூரி காவலர்கள், நோயாளிகள், பொதுமக்கள் என 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இடத்தில், நோயாளி ஒருவர் மாடியில் இருந்து தவறி விழுந்த இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.