கரூர்: கல்லால் அடித்த கும்பல் ; `இது ஆணவக்கொலை?!' - கதறும் இளைஞரின் உறவினர்கள்

``இது ஆணவக்கொலை. ஆனால், இந்த வழக்கை, பையனின் கேரக்டர் சரியில்லை என்று சாதாரணமாக முடிக்கப் பார்க்கிறார்கள்" என்று ஹரிஹரனின் உறவினர்களும் நண்பர்களும் சொல்கிறார்கள்.
கரூர் நகரத்திலுள்ள முக்கியப் பகுதியான பசுபதீஸ்வரர் கோயிலுக்கு எதிரே, காவல் நிலையத்துக்கு 50 மீட்டர் தூரத்திலேயே இளைஞர் ஒருவர் 10-க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பலால், கல்லால் அடித்தும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கரூர் காமராஜர் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராமன். இவருடைய மகன் ஹரிஹரன் (வயது 23). இதே பகுதியில் சலூன் கடை நடத்திவருகிறார். இவரின் கடை எதிரேயுள்ள தெற்குத் தெருப் பகுதியைச் சேர்ந்தவர்கள் வேலன், தேவி தம்பதியர். வேலன், தனது வீட்டருகே பழைய இரும்புக்கடை நடத்திவருகிறார். இவருக்கு ஒரு மகள் இருக்கிறார். அவர், கரூரிலுள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்துவருகிறார். சலூன் கடை நடத்திவரும் ஹரிஹரனுக்கும், வேலனின் மகளுக்கும் இடையே காதல் மலர்ந்ததாகச் சொல்கிறார்கள்.

அவர்களின் காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரியவர, கடந்த ஆறு மாத காலமாக ஹரிஹரனுக்கு அந்தப் பெண்ணுக்கும் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று மதியம் சுமார் 1:30 மணியளவில், கரூர் பசுபதீஸ்வரர் ஆலயம் முன்பு இளம்பெண்ணின் பெற்றோர், தன் மகளைக் கொண்டே ஹரிஹரனை, `தனியாகப் பேச வேண்டும்' என அழைத்ததாகக் கூறப்படுகிறது.
அந்த இடத்துக்குச் சென்ற ஹரிஹரனை வேலன் குடும்பத்தார் 10-க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கல்லால் அடித்துக் கொலை செய்திருக்கிறார்கள். அங்கிருந்து கரூர் நகர காவல் நிலையம் 50 மீட்டர் தூரத்தில்தான் இருக்கிறது. இந்தநிலையில், போலீஸார் அந்த இடத்துக்கு விரைந்து வந்தும் கரூர் நகர போலீஸாரிடம், அடிபட்ட ஹரிஹரனை ஒப்படைக்காமல், தாங்களே மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ப்பதாக அந்தக் கும்பல் இழுத்துச் சென்றதாகவும் சொல்கிறார்கள். இந்தநிலையில், கரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட ஹரிஹரன் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. காதலித்த இருவரும் வேறு வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்தப் படுகொலை திட்டமிட்டு வேலன் குடும்பத்தாரால் செய்யப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

இந்தநிலையில், சலூன் கடை நடத்திவந்த ஹரிஹரனை வெட்டிக் கொன்றதாக, பெண்ணின் சித்தப்பா சங்கர் (50), தாய்மாமன்கள் கார்த்திகேயன்(40), வெள்ளைச்சாமி (38) ஆகிய மூவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். மேலும் தந்தை வேலன், சித்தப்பா முத்து உள்ளிட்டவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். கைதுசெய்யப்பட்டவர்கள் மீது ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, கரூர் நகர காவல் நிலைய போலீஸார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ``இது ஆணவக்கொலை. ஆனால், இந்த வழக்கை, பையனின் கேரக்டர் சரியில்லை என்று சாதாரணமாக முடிக்கப் பார்க்கிறார்கள்" என்று ஹரிஹரனின் உறவினர்களும் நண்பர்களும் சொல்கிறார்கள்.