மும்பை அருகிலுள்ள பால்கர் கடற்கரையோர கிராமமான மாகிமில் வசிக்கும் 16 வயது சிறுமி, அதே கிராமத்தைச் சேர்ந்த ஒருவரைக் காதலித்துவந்ததாகச் சொல்லப்படுகிறது. அந்தச் சிறுமி அவரின் காதலனுடன் கடற்கரைக்குச் சென்றபோது அங்குள்ள பாழடைந்த பங்களாவில் காதலன் உட்பட எட்டுப் பேர் கொண்ட கும்பலால் இரவு முழுவதும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து 15 மணி நேரம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணை அவரின் காதலன், சம்பவம் நடந்த இடத்திலிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டு சம்பவத்தை வெளியில் சொன்னால் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொல்லி மிரட்டி அனுப்பிவைத்திருக்கிறார். ஏற்கெனவே தங்களது மகளை இரவிலிருந்து காணவில்லை என்று அவரின் பெற்றோர் போலீஸில் புகார் செய்திருந்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

அப்போது, அந்தச் சிறுமி தனது தந்தைக்கு போன் செய்து நடந்த விவரத்தைத் தெரிவித்தார். உடனே விரைந்து செயல்பட்டு, அந்தப் பெண்ணின் காதலனை போலீஸார் முதலில் கைதுசெய்தனர். அவரைக் கைதுசெய்து, அவரிடம் விசாரித்து எஞ்சிய ஏழு பேரையும் எளிதில் கைதுசெய்தனர். இது குறித்து போலீஸார் கூறுகையில், ``குற்றவாளிகள் பாலியல் வன்கொடுமை சம்பவத்தை மொபைல் போனில் பதிவுசெய்து வைத்திருக்கிறார்களா என்பது குறித்து விசாரித்துவருகிறோம். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவப் பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கிறார். பாதிக்கப்பட்ட பெண் அவரின் காதலனுடன் பைக்கில் கடற்கரைக்குச் சென்றிருக்கிறார். அவரின் காதலன் அங்கிருந்து சற்றுத் தொலைவில் இருக்கும் பங்களாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு ஏற்கெனவே ஏழு பேர் மது அருந்தியபடி பார்ட்டி நடத்திக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் சேர்ந்து இரவிலிருந்து மறுநாள் காலை 11 மணி வரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். பின்னர் அந்தப் பெண்ணை அழைத்துச் சென்று தனியாக விட்டுவிட்டு வந்துவிட்டனர். அந்தப் பெண் தனது தந்தைக்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். உடனே அவரின் தந்தை இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் விரைந்து செயல்பட்டு அந்தப் பெண்ணின் மொபைல் சிக்னலை வைத்து அவரை கண்டுபிடித்தனர்” என்று தெரிவித்தார்கள்.