கேரள மாநிலம், கொச்சியைச் சேர்ந்த தனியார் ஏஜென்சி ஒன்று அதிக சம்பள ஆசைகாட்டி பெண்களை அரபு தேசங்களுக்கு வேலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. டெய்லரிங், நர்ஸிங் உள்ளிட்ட வேலைகளுக்கு என அழைத்துச் சென்று அவர்களை வீட்டு வேலை செய்ய அடிமைகளாக விற்பனை செய்த கொடுமை தற்போது அம்பலமாகியிருக்கிறது. மேலும், சுமார் நூறு பெண்களை சிரியாவுக்குக் கொண்டு சென்று ஐ.எஸ் அமைப்பினருக்குப் பாலியல் அடிமைகளாக விற்பனை செய்ததாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது சம்பந்தமாக என்.ஐ.ஏ விசாரணை நடத்திவருகிறது. கேரள போலீஸும் விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறது. இந்த விசாரணையில் கண்ணூரைச் சேர்ந்த மஜீத், பத்தனம்திட்டாவைச் சேர்ந்த அஜுமோன் ஆகியோர் முக்கியக் குற்றவாளிகள் எனத் தெரியவந்திருக்கிறது.
மஜீத் வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் நிலையில், அஜுமோன் முன்ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தார். முன்ஜாமீன் கிடைக்காததால் எர்ணாகுளம் சவுத் போலீஸில் நேற்று சரணடைந்தார். அவரிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். அஜுமோன்மீது ஆள் கடத்தல் பிரிவான ஐ.பி.சி 370 படி வழக்கு பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

வெளிநாட்டிலிருந்து உயிர்தப்பி வந்த கொச்சியைச் சேர்ந்த இளம்பெண் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது. குழந்தைகளைப் பராமரிக்கும் பணிக்கு மாதம் 60,000 சம்பளம், விமான டிக்கெட் இலவசம் என ஏமாற்றி இளம்பெண்களை குறிவைத்து வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். புகார் அளித்த இளம்பெண்ணை முதலில் துபாய்க்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். பின்னர் அங்கிருந்து குவைத்துக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். குவைத்தில் மாமா என அழைக்கப்படும் பெண் ஒருவர் இந்த இளம்பெண்ணை அழைத்துச் சென்றிருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கொச்சியைச் சேர்ந்த அந்த இளம்பெண்ணை குவைத்தில் கொண்டு சேர்த்ததற்காக மஜீத்துக்கு மூன்றரை லட்சம் ரூபாய்க்கு மேல் வழங்கப்பட்டதாக அந்தப் பெண் தனது புகாரில் கூறியிருக்கிறார். மேலும் கொல்லத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும், திருக்காக்கரை பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் இவர்களால் பாதிக்கப்பட்டிருப்பதும் தெரியவந்திருக்கிறது. இதில் சிரியாவிலிருந்து தப்பித்து வந்த இளம்பெண்ணிடம் என்.ஐ.ஏ விசாரணை நடத்தியிருக்கிறது. இளம்பெண்கள் அதிக சம்பளத்தில் வேலை என ஆசைகாட்டி சிரியாவுக்குக் கொண்டுசெல்லப்பட்டு ஐ.எஸ் அமைப்பினருக்கு விற்பனை செய்யப்பட்டிருப்பதாக எழுந்த புகார் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. முதல் குற்றவாளியான மஜீத்தைக் கைதுசெய்தால் ஐ.எஸ் அமைப்புடன் அவருக்கு எப்படித் தொடர்பு ஏற்பட்டது என்பது தெரியவரும் என போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.