கோவை காளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ரவி ரங்கன் (49). இவர் சரக்கு ஆட்டோ ஓட்டுநராகப் பணி செய்துவந்திருக்கிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் சரக்கு வாகனத்தில் அமர்ந்துகொண்டு மணிகண்டன் என்பருடன் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மறைத்துவைக்கப்பட்டிருந்த பெட்ரோலை ரவி மீது ஊற்றி தீ வைத்தார். இதில் ரவியின் உடல் முழுவதும் தீ பரவியது. அருகில் பேசிக்கொண்டிருந்த மணிகண்டன் என்பவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது.
இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து ரவி, மணிகண்டன் ஆகியோரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர். தீ பற்றவைத்த மர்ம நபர் தப்பி ஓட முயன்றபோது பொதுமக்கள் சேர்ந்து அவரைப் பிடித்து பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ரவி அதிக தீக்காயங்கள் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பீளமேடு போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். இதில் ரவி மீது பெட்ரோலை ஊற்றி எரித்தது நேரு நகரில் வசித்துவரும் விருதுநகரைச் சேர்ந்த பூமாலை ராஜா என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீஸார் பூமாலை ராஜா மீது கொலை வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
ரவிக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்த நிலையில், மாவட்ட நிர்வாகம் கல்வி உள்ளிட்ட பொருளாதார உதவிகள் செய்ய வேண்டும் என ரவியின் குடும்பத்தார் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். மேலும் ரவியின் உறவினர்கள், குற்றவாளி மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் சரியான விசாரணை நடத்த வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் போராட்டம் நடத்தினர். ரவியின் மனைவி கூறியதாவது, ``வாடகை வீட்டில்தான் இரண்டு குழந்தைகளுடன் வசித்துவருகிறோம். அந்த நபர் யார் என்றே எனக்குத் தெரியாது என்று என் கணவர் போலீஸாரிடம் வாக்குமூலம் தந்திருக்கிறார்.

கொலை செய்த நபர் வேலையில்லாத விரக்தியில் கொலை செய்ததாக போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஆனால், இது சந்தேகமாக இருக்கிறது என உறவினர்கள் கூறுகின்றனர். நேர்மையாக விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.