புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே வேந்தன்பட்டியைச் சேர்ந்தவர் சிகப்பி (75). இவரின் மகன் பழனியப்பன் (55). இன்ஜினீயரான இவர் வீடு கட்டுமான தொழில் செய்து வந்தார். இவர் மனைவி உஷா, ஈரோட்டில் ஆசிரியராகப் வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில், தனது பிறந்தநாளையொட்டி பழனியப்பன், தாய் மற்றும் தன்னுடன் பணியாற்றும் ஊழியர்களுடன் சேர்ந்து அவருடைய மரப்பட்டரையில் வைத்து கொண்டாடியுள்ளார்.
அதைத் தொடர்ந்து, நேற்றிரவு தாயாருக்குச் சாப்பாடு கொடுப்பதற்காக வேநதன்பட்டி வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.

பின்னர் வீட்டிற்குள் இருந்த இருவரும் காலை நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், வழக்கம் போல் கட்டட வேலைக்குச் செல்வதற்காக பழனியப்பனைப் பார்க்க வந்த தொழிலாளர்கள் பழனியப்பனின் வீட்டின் கதவைத் தட்டியுள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை. அதனால், சந்தேகமடைந்த தொழிலாளர்கள் வீட்டின் பின்புறம் சென்று ஜன்னலைப் பார்த்தபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
பழனியப்பன் மற்றும் அவரது தாய் சிகப்பி இருவரும், ரத்த வெள்ளத்தில் இறந்துகிடந்தனர்.
இது குறித்து, பொன்னமராவதி போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற் போலீஸார், அரிவாளால் வெட்டப்பட்ட நிலையில் இருந்த இருவரின் சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
வீட்டின் முன்பு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவின் வயர்கள் அனைத்தும் அறுக்கப்பட்டு கிடந்தன. வீட்டின் உள்ளே இருந்த பீரோவும் உடைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான், நகை, பணத்திற்காக தாய் மகன் இருவரும் கொலைசெய்யப்பட்டனரா, இல்லை முன்விரோதம் அல்லது தொழில் போட்டி காரணமாக கொலைசெய்யப்பட்டனாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாவட்ட எஸ்.பி வந்திதா பாண்டே நேரடியாகச் சென்று விசாரணை நடத்தினார்.
தாய், மகன் இருவரும் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பொன்னமராவதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.