நீலகிரி: தண்ணீர் தொட்டிக்குள் மகள்; மகனுக்கு விஷம்! - அடுத்தடுத்து கிடந்த 4 உடல்கள்

காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்.
நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள கொலக்கொம்பைப் பகுதியில் இருக்கிறது கிரேக்மோர் தனியார் தேயிலைத் தோட்டம். இந்தத் தேயிலைத் தோட்டத்தில் வட மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிக அளவில் தோட்டத் தொழிலாளர்களாகப் பணி செய்துவருகின்றனர். இவர்களுக்கான குடியிருப்புகளும் தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியிலேயே இருக்கின்றன.

இதே தேயிலைத் தோட்டத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அஷோக் பகத் (30), சுமதி (28) தம்பதியர் தோட்டத் தொழிலாளர்களாக வேலை செய்துவந்தனர். இவர்களுக்கு அபய் என்ற 9 வயது மகனும், ரேஷ்மா என்ற 5 வயது மகளும் இருக்கிறார்கள்.
இந்தநிலையில், நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் இவர்கள் வீட்டின் கதவு திறக்கப்படாமல் இருந்திருக்கிறது. இதனால் சந்ததேகமடைந்த அக்கம்பக்கத்தினர், அருகிலுள்ள கொலக்கொம்பை காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

விரைந்து வந்த காவல்துறையினர், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்ததில், கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் சுமதி ரத்த வெள்ளத்தில் சடலமாகக் கிடந்திருக்கிறார்.
அடுத்த அதிர்ச்சியாக அருகிலுள்ள தண்ணீர்த் தொட்டியில் சுமதியின் மகள் ரேஷ்மா இறந்து கிடந்தார். 9 வயது மகன் அபயும் பக்கத்து அறையில் இறந்துகிடந்தார். தொழிலாளி அஷோக் பகத்தின் சடலமும் தூக்கில் தொங்கியபடி கண்டெடுக்கப்பட்டது.

ஒரே இடத்தில் அடுத்தடுத்து நான்கு உடல்கள் கிடந்தது மாவட்டத்தையே சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்த சோக நிகழ்வு குறித்து கொலக்கொம்பை காவல்துறையினர், ``குடும்பத் தகராறு காரணமாக அஷோக் பகத் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்துவிட்டு, மகனுக்கு விஷம் கொடுத்தும், மகளைத் தண்ணீர் தொட்டியில் போட்டும் கொலை செய்துவிட்டு, அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டுவருகிறோம். உடற்கூறாய்வு முடிவுகள் மற்றும் அடுத்தகட்ட விசாரணைக்குப் பின்னரே உரிய காரணம் தெரியவரும்" என்றனர்.

கடந்த 21-ம் தேதி இதே பகுதியில் 8 வயது சிறுமி ஒருவர் மாயமாகி, தற்போது வரை அவரைக் கண்டறிய முடியாமல் காவல்துறை திணறிவருவதும் குறிப்பிடத்தக்கது.