நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை ஊராட்சி காளிசெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன். இவர், லாரி டிரைவராக இருக்கிறார். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு ஜோனின் (14) என்ற மகனும், மவுலீசா (10) என்ற மகளும் உள்ளனர். மவுலீசா அருகில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்துவருகிறார். சரவணன், அங்கு ஒரு வீட்டு மாடியில் வாடகைக்குக் குடியிருந்து வருகிறார்.
சரவணன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வேலை விஷயமாக வெளியூர் சென்றுவிட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கவுசல்யா, ஜோனின் மற்றும் மவுலீசா மூவரும் வீட்டு மொட்டை மாடியில் தூங்கிக்கொண்டிருந்தனர். அப்போது, இரவு சுமார் 2 மணி அளவில் முகமூடி அணிந்து வந்த இரண்டு மர்ம நபர்கள் ஜன்னல் சிலாப் வழியாக ஏறி மொட்டைமாடிக்குச் சென்றனர். பின்னர், அங்கு தூங்கிக்கொண்டிருந்த கவுசல்யாவை எழுப்பி கழுத்தில் கத்தியைவைத்து மிரட்டினர். பிரகு, கவுசல்யா, தூங்கிக்கொண்டிருந்த ஜோனின் வாய்களில் பிளாஸ்டிக் பேண்டேஜ் ஒட்டினர்.

இதையடுத்து, இரண்டு பேரின் கைகளையும் பின்னால் கட்டிப் போட்டுவிட்டு, ரெண்டு பேரும் சத்தம் போட்டால் மகளைக் கொன்றுவிடுவதாக மிரட்டினர். இதையடுத்து, சிறுமி மவுலீசாவை மிரட்டி அங்கிருந்து கடத்திச் சென்றுவிட்டனர். மேலும் கவுசல்யா அணிந்திருந்த நகை, வெள்ளிக் கொலுசு ஆகியவற்றையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். அதன் பிறகு, கவுசல்யா அங்கிருந்த கத்தியைச் சிரமப்பட்டு எடுத்து, இரண்டு பேர் கைகளில் கட்டப்பட்ட கயிற்றை அறுத்ததுடன், வாயில் இருந்த பேண்டேஜை எடுத்துவிட்டு சத்தம் போட்டார். இந்தச் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்தனர்.
அவர்கள் மூலமாக உடனடியாக எருமப்பட்டி போலீஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்சரண் தேஜஸ்வி, துணை சூப்பிரண்டு சுரேஷ், எருமப்பட்டி இன்ஸ்பெக்டர் குமரவேல் பாண்டியன், சப்-இன்ஸ்பெக்டர் பூபதி மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, கவுசல்யா, ஜோனினிடம் விசாரணை நடத்தினர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும், பெரிதாக பலனில்லாமல் போனது. அதோடு, கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அவர்களும் மொட்டைமாடியில் பதிவாகியிருந்த தடயங்களைச் சேகரித்தனர். ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கடத்தப்பட்ட சிறுமியை மீட்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. சிறுமியை அவரின் உறவினர்கள் கடத்தியிருக்கலாம் என்ற கோணத்தில் போலீஸார் விசாரணையைத் தொடர்ந்தனர். இந்த நிலையில், சிறுமியைக் கடத்திய மர்ம நபர்கள் கவுசல்யா வைத்திருந்த செல்போனில் இருந்த சிம் கார்டையும் எடுத்துச் சென்றதாகச் சொல்லப்பட்டது. இதையடுத்து நேற்று காலை 11 மணி அளவில் வீட்டின் உரிமையாளரான முருகேசனுக்கு, கவுசல்யாவின் சிம் எண்ணிலிருந்து போன் வந்துள்ளது.

அப்போது போனில் பேசிய மர்ம நபர்கள், சிறுமி மவுலீசா உயிருடன் வேண்டும் என்றால், தங்களுக்கு ரூ.50 லட்சம் தர வேண்டும் எனக் கூறி மிரட்டிவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியான முருகேசன் காவல்துறைக்குத் தகவல் கொடுத்தார். அதனால், மற்றொரு தனிப்படை அமைக்கப்பட்டதோடு, சிறுமியின் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, `சிறுமியைப் பார்த்தவர்கள் உடனே தகவல் தெரிவிக்கவும்' என்று காவல்துறை சார்பில் கோரிக்கையும் வைக்கப்பட்டது. இதையடுத்து, கடத்தப்பட்ட சிறுமியை மீட்க, காவல்துறை தனிப்படையினர் இன்னும் தீவிரம் காட்டினர். இந்த நிலையில், இன்று அதிகாலை நாமக்கல் துறையூர் சாலையிலுள்ள காளிசெட்டிப்பட்டி பிரிவு சாலையில் பெட்ரோல் பங்க் அருகே சிறுமி மவுலீசாவை மர்மநபர்கள் விட்டு சென்றுள்ளனர். இந்த தகவலை தொடர்ந்து, சிறுமியை மீட்ட போலீஸார், சிறுமியைக் கடத்தியவர்கள் குறித்து தீவிர தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்.