பரமத்திவேலூர் அருகே செல்போனில் பப்ஜி கேம் விளையாடுவதைப் பெற்றோர் கண்டித்ததால், 12-ம் வகுப்பு படித்துவந்த மாணவர் விஷம் குடித்து, தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அவருடைய உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் பக்கத்தில் ஜேடர்பாளையம் அருகேயுள்ள சிறுநல்லிகோயில், எல்லுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் செங்கோட்டையன். இவரின் மகன் பிரதிஷ் (வயது 17). இவர், ஈரோட்டிலுள்ள ஒரு தனியார் பள்ளியில் 12 -ம் வகுப்பு படித்துவந்தார். பிரதிஷ் ஆன்லைன் கிளாஸ் அட்டெண்ட் செய்வதற்காக பெற்றோர் ஆண்ட்ராய்டு மொபைல் ஒன்றை வாங்கித் தந்துள்ளனர். இவர், வீட்டில் தொடர்ந்து செல்போனில் பப்ஜி கேம் விளையாடிவந்ததாகவும், அதை பெற்றோர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த பிரதிஷ், வீட்டில் வைத்திருந்த தோட்டத்துக்குப் பயன்படுத்தக்கூடிய பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தியிருக்கிறார். பின்னர், அவருக்கு வயிற்றுவலி ஏற்படவே பெற்றோரிடம் விஷ மருந்து அருந்தியதை மறைத்து, வயிறு வலிப்பதாகக் கூறியிருக்கிறார்.

இதையடுத்து, அவருடைய பெற்றோர் நாமக்கல்லிலுள்ள ஒரு தனியார் மருத்துமனையில் பிரதிஷை சிகிச்சைக்காகச் சேர்த்துள்ளனர். இந்தநிலையில், பிரதிஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் சம்பவம் குறித்துத் தகவலறிந்த ஜேடர்பாளையம் காவல் நிலைய போலீஸார் மாணவரின் உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர். செல்போனில் பப்ஜி கேம் விளையாட வேண்டாம் என்று தனது பெற்றோர் கண்டித்ததால் மனமுடைந்த் மாணவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம், அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.