நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த பட்டணம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன். இவர், அரசுப் பேருந்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்துவருகிறார். இவரின் மகன் சுரேஷ். பி.காம் படித்துவிட்டு வெளிநாட்டில் வேலைக்குச் செல்வதற்காக முயன்றுவந்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த நிலையில், வீட்டில் இருந்த சுரேஷ் அடிக்கடி ஆன்லைன் ரம்மி விளையாடிக்கொண்டிருந்ததாக தெரிகிறது. நாளடைவில் சுரேஷ் அதற்கு அடிமையாகி, தொடர்ந்து விளையாடிக்கொண்டிருந்திருக்கிறார்.

அதோடு, சுரேஷ் ஆன்லைன் ரம்மியில் ரூ. 5 லட்சத்துக்கும் மேல் பணத்தை இழந்ததாகத் தெரிகிறது. இதனால், மனமுடைந்த சுரேஷ், 'வெளிநாடு செல்லவைத்திருந்த பணத்தையும், உறவினர்களிடமும் நண்பர்களிடமும் வாங்கிய பணத்தையும் முழுமையாக ரம்மியில் இழந்துவிட்டேன். மேலும், ஆன்லைன் ரம்மியிலிருந்து என்னால் மீள முடியவில்லை. பை.. .பை... மிஸ் யூ ரம்மி' எனக் கடிதம் எழுதிவைத்துவிட்டு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், தற்கொலை செய்துகொண்டு இறந்த சுரேஷின் தந்தை விஸ்வநாதன், ``வெளிநாடு போகிறேன் என்று என்னிடம் பணம் வாங்கி, அதை ஆன்லைன் ரம்மி விளையாட்டில் விட்டிருக்கிறான். இதனால், மனமுடைந்து தற்கொலை பண்ணிக்கிட்டான். ஆன்லைன் ரம்மியால் தமிழ்நாட்டில் உயிரிழப்புச் சம்பவம் தொடர்ந்து நடந்து வருகிறது. அதன் அடிப்படையில் தற்போது என்னுடைய மகனும் ஆன்லைன் ரம்மியால் பணத்தை இழந்து, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்டான்.

இது போன்ற தற்கொலைச் சம்பவங்கள் நடக்காமலிருக்க தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு, ஆன்லைன் ரம்மியை முற்றிலும் தடைசெய்ய வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்திருக்கிறார். ஆன்லைன் ரம்மியால் ரூ.5 லட்சத்தை இழந்த விரக்தியில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருக்கும் சம்பவம், அவரின் உறவினர்களைச் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.
