மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டத்தில் உள்ள மட்னி என்ற கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு 18 வயதாகிறது. மூத்த மகள் உறவினர் வீட்டில் தங்கி படித்துவருகிறார். சமீபத்தில் 18 வயது மகள் வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்தச் சமயத்தில் எல்லப்பாவிடம் அவரது வீட்டுக்கு அருகில் புதையல் இருப்பதாக மந்திரவாதி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இதையடுத்து மந்திரவாதியின் துணையோடு எல்லப்பா கடந்த சில நாள்களாக வீட்டில் பூஜை செய்துவந்திருக்கிறார். பூஜைக்குப் பிறகு புதையலை எடுக்க வேண்டும் என்பதற்காக, எல்லப்பா தன் மூத்த மகளை நரபலி கொடுக்க திட்டமிட்டிருந்திருக்கிறார். இதற்காக வீட்டுக்கு வெளியில் பெரிய குழி ஒன்றைத் தோண்டி, நரபலி கொடுத்த பிறகு தன் மகளை அதில் போட்டு புதைக்க எல்லப்பா திட்டமிட்டிருந்தார்.

இதை அறிந்துகொண்ட 18 வயதுப் பெண், தன் தோழிக்குத் தகவல் கொடுத்தார். உடனே அவர் தோழி இது குறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தார். போலீஸார் உடனே விரைந்து செயல்பட்டு பெண்ணின் தந்தை, மந்திரவாதி உட்பட ஒன்பது பேரைக் கைதுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தச் சம்பவம் தொடர்பாக யவத்மால் எஸ்.பி திலிப் புஜ்பால் கூறுகையில், ``நரபலி தொடர்பாக கைதுசெய்யப்பட்டிருக்கும் குற்றவாளிகளில் ஒருவர் பெண்ணின் தந்தை. அவர் தன் மகளைப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார். எனவே குற்றவாளிகள் மீது கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது. நரபலி முயற்சியில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டுவருகிறது" என்றார்.