தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகேயுள்ள அயன் விருசம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆத்தியப்பன். இவர் மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு விஜயக்குமார், குருசாமி, முருகேசன் என 3 மகன்களும், குருலெட்சுமி என்ற மகளும் உள்ளனர். இதில் குருலெட்சுமிக்கு திருமணமாகி கணவருடன் தூத்துக்குடியில் வசித்து வருகிறார். மற்றவர்களுக்கு திருமணமாகவில்லை. நெடுங்குளம் ஊராட்சியில் குடிநீர் தொட்டியில் குடிதண்ணீர் திறக்கும் பணி செய்துவந்த ஆத்தியப்பன், கடந்த 10 நாள்களுக்கு முன்புதான் பணி ஓய்வு பெற்றுள்ளார். ஆத்தியப்பனின் மூத்த மகன் விஜயகுமார், தூத்துக்குடியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இவர், வேலையை முடித்து விட்டு வீட்டிற்கு வரும்போது மது அருந்தி விட்டு எப்போதும் வீட்டில் தகராறில் ஈடுபடுவது வழக்கமாம. விஜயகுமார், வேலைக்குச் செல்லாமல் வீட்டில் வைத்து மது அருந்தியுள்ளதைக் கண்ட அவர் தந்தை ஆத்தியப்பன் கண்டித்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. சிறிது நேரத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில், விஜயக்குமார் தன் தந்தையை தாக்கி, அவரது ஆடைகளைக் களைந்து வெளியே ஏறிந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நிர்வாணமான ஆத்தியப்பன், வெளியில் கொடியில் கிடந்த துண்டினை எடுத்து இடுப்பில் கட்டுக்கொண்டு, பக்கத்து வீட்டில் இருந்த வேல்ராஜ் என்பவரிடம் வேட்டி வாங்கி உடுத்திக்கொண்டு, வீட்டிற்குச் செல்ல பயந்து வேல்ராஜின் வீட்டு வாசல்படியிலேயே அமர்ந்து இருந்துள்ளார். அப்போது மது போதையில் தள்ளாடிக் கொண்டிருந்த விஜயக்குமார் கையில் கத்தியுடன் ஆத்தியப்பனை நோக்கி வந்துள்ளார். இதனைப் பார்த்த ஆத்தியப்பன், பயத்தில் எழுந்து ஓட முயற்சி செய்துள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக கால்தவறி கீழே விழுந்துள்ளார். வீட்டின் ஓரத்தில் கிடந்த கல்லில் விழுந்ததால் தலை, மூக்குப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து அங்கிருந்து தப்ப முயன்ற விஜயகுமாரை கிராம மக்கள் பிடித்து விளாத்திகுளம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விஜயகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.