சென்னை ராயப்பேட்டை காசிம் தெருவைச் சேர்ந்தவர் தேவி. இவர் அண்ணாசாலை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில், ``என்னுடைய சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா தங்கமால்புரம். என் கணவர் மாரியப்பன் என்னை விட்டு பிரிந்து விட்டார். அதனால் நான் என்னுடைய மகன்களுடன் சென்னையில் வசித்து வருகிறேன். என்னுடைய மூத்த மகன் தாவித்ராஜா (20). பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளான். அவனுக்கு கஞ்சா, மது அருந்தும் பழக்கம் இருந்தது. அவன் கேரளாவில் உள்ள பெட்ரோல் பங்க்கில் வேலைப்பார்த்து வந்தான். அப்போது அவனை திருட்டு வழக்கில் கேரளா போலீஸார் கைதுசெய்ததாக என்னுடைய அக்கா மகன் என்னிடம் கூறினான்.

அதனால் கேரளாவிலிருந்து தாவித்ராஜாவை சென்னைக்கு வரும்படி கூறினேன். அதன்படி சென்னை வந்த தாவித்ராஜா என்னுடன் தங்கியிருந்தான். கடந்த 9-ம் தேதி என்னுடைய அக்காள் மகனுக்கு ராமநாதபுரத்தில் திருமணம் நடந்தது. அதனால் நான் அங்கு சென்றுவிட்டு கடந்த 14-ம் தேதி சென்னை வந்தேன். வீட்டுக்குச் செல்ல ஆட்டோவில் வந்தபோது ராயபேட்டை பீட்டர்ஸ் ரோடு ஒய்.எம்.சி.ஏ தெற்கு பகுதியில் உள்ள பிளாட்பாரத்தில் சட்டை இல்லாமல் தாவித் ராஜா படுத்திருந்தான். அதைப்பார்த்த நான் ஆட்டோவை நிறுத்தி அவனை அதே ஆட்டோவில் வீட்டுக்கு அழைத்துச் சென்றேன். அவன் நீண்ட நேரமாக கண்விழிக்காததால் அவனை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அப்போது தாவித் ராஜா ஏற்கெனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நான் ஊருக்குப் போன நாளிலிருந்து தாவித்ராஜா வீட்டுக்கு வரவில்லை என்று என்னுடைய இளைய மகன் என்னிடம் கூறினான். எனவே என்னுடைய மகன் தாவித் ராஜாவின் மரணத்தில் எனக்கு சந்தேகம் உள்ளது. அவனின் மரணத்துக்கு காரணமானவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம், இயற்கைக்கு மாறான மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸாரிடம் விசாரித்தபோது, ``தாவித்ராஜா இறந்து கிடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தோம். அப்போது பைக்கில் சென்ற ஒரு பெண் உட்பட 4 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களைப் பிடித்து விசாரித்தோம். விசாரணையில் அவர்கள் சங்கீதா என்கிற ரோசி, ஜீவா, ராஜேஷ், பார்த்திபன் எனத் தெரிந்தது. அவர்களிடம் மேலும் விசாரித்தபோது கடந்த 13-ம் தேதி சத்யம் திரையரங்கம் அருகில் உள்ள பூங்காவில் தாவித்ராஜாவுடன் சங்கீதா உட்பட நான்கு பேரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது சங்கீதா தரப்புக்கும் தாவித்ராஜாவுக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அதனால் ஆத்திரமடைந்த சங்கீதா உட்பட 4 பேரும் தாவித்ராஜாவை கட்டையால் தாக்கியுள்ளனர். அதில் மயக்கமடைந்த தாவித்ராஜாவை பைக்கில் ஏற்றி ஒய்எம்சிஏ பகுதியில் இறக்கிவிட்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் நான்கு பேரையும் கைதுசெய்தோம். ஒரு பைக்கையும் பறிமுதல் செய்துள்ளோம். கைதான நான்கு பேரும் ஆயிரம் விளக்கு பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த வழக்கில் கைதான சங்கீதா மீது கண்ணகி நகர் காவல் நிலையத்தில் கஞ்சா வழக்கும், ராஜேஷ் மீது ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்தில் கொலை முயற்சி, கஞ்சா வழக்கும் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் வழிப்பறி வழக்கும் உள்ளது" என்றனர்.