கோவை, ஆர்.எஸ்.புரம் பகுதியில் தங்க நகைப்பட்டறை வைத்திருப்பவர் பியூஸ். தங்க நகைகளை ஆர்டர் தருவோருக்கு ஆபரணங்களை வடிவமைத்துக் கொடுத்துவருகிறார். அவரது பட்டறையில் மேற்கு வங்கம் உள்ளிட்ட வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பணியாற்றிவருகின்றனர்.

அந்த வகையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சதாம் உசேன் என்பவரும் அவரது பட்டறையில் பணியாற்றிவந்தார்.
இந்த நிலையில், சதாம் உசேன் கடந்த சில நாள்களுக்கு முன்பு தங்க நகைகளை ஃபினிஷிங் செய்யும் இடத்திலிருந்து கைச்சங்கிலி, தோடு தங்க நகைகளைப் பெற்றிருக்கிறார். அவற்றை பியூஸிடம் ஒப்படைக்கவேண்டியது அவரது பணி. ஆனால், ஃபினிஷிங் செய்த நகைகளை அவர் ஒப்படைக்கவில்லை.

இதையடுத்து பியூஸ், சதாம் உசேனைத் தொலைபேசியில் அழைத்திருக்கிறார். அப்போது அவரது எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சதாம் உசேன் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோதும், அவர் அங்கு இல்லை.
இது குறித்து பியூஸ், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், தன்னுடைய பட்டறையிலிருந்து, ரூ.33 லட்சம் மதிப்புடைய 621 கிராம் எடையுள்ள தங்க நகைகளை சதாம் திருடிச் சென்றவிட்டதாகக் கூறியிருந்தார். போலீஸ் விசாரணையில் சதாம் உசேன் தங்க நகைகளைத் திருடியது தெரியவந்தது. மேலும், சதாம் மேற்கு வங்க மாநிலத்தில் பதுங்கியிருப்பதும் தெரியவந்தது.

உடனடியாக விமானத்தில் சென்ற தனிப்படை போலீஸார், அவரைக் கைதுசெய்து நகைகளை மீட்டனர். தகவலறிந்த ஆறு மணி நேரத்துக்குள் குற்றவாளியைப் பிடித்து, நகைகளையும் மீட்ட காவல்துறைக்கு பியூஸ் நன்றி தெரிவித்தார்.