தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளத்தைச் சேர்ந்தவர் ஸ்டாலின் பெஞ்சமின். இவர், விளாத்திகுளம் காய்கறி மார்க்கெட் பகுதியிலுள்ள சன்னதித் தெருவில் பலசரக்குக்கடை வைத்து நடத்திவருகிறார். கடந்த 17-ம் தேதி இரவில் வழக்கம்போல் கடையைப் பூட்டிவிட்டு மறுநாள் காலையில் வந்து பார்த்தபோது கடையின் வெளிப்புறத்தில் பூட்டித் தொங்கவிடப்பட்டிருந்த இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. கடைக்குள் சென்று பார்த்த ஸ்டாலின் பெஞ்சமினுக்கு, கல்லாப் பெட்டியில் வைத்திருந்த ரூ.25,000 பணம் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர், விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவந்தனர். அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, சைக்கிளில் வந்த முதியவர் ஒருவர், கடையின் முன்பு சைக்கிளை நிறுத்திவிட்டு கடையின் பூட்டை உடைத்துப் பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது. அதே பகுதியிலுள்ள சில கடைகளின் சிசிடிவி கேமரா காட்சிகளையும் போலீஸார் ஆய்வுசெய்தனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSஅதில், அந்த முதியவர் சைக்கிளில் நகருக்குள் சாதாரணமாக வலம் வருவதுபோல, கடைகளை நோட்டமிடுவது தெரியவந்தது. இதையடுத்து அந்த முதியவரை போலீஸார் தேடிவந்தனர். இந்த நிலையில், கடந்த 26-ம் தேதி விளாத்திகுளம் மீரான்பாளையத்தைச் சேர்ந்த ஆனந்தராமன் என்பவர், சித்தவநாயக்கன்பட்டி கிராமப் பகுதியில் நடந்து வந்துகொண்டிருந்தபோது அவரை வழிமறித்து முதியவர் ஒருவர் கத்தியைக் காட்டி மிரட்டிப் பணம் பறிக்க முயன்றுள்ளார். இதையடுத்து அவர் சத்தம்போடவும் அந்த முதியவர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதையடுத்து விளாத்திகுளம் காவல் நிலையத்தில் புகார் அளித்ததுடன் ’தாடிவைத்த முதியவர்’ எனத் தன்னிடம் பணம் பறிக்க வந்தவரின் அடையாளத்தையும் சொன்னார். அதன் அடிப்படையில் தனிப்படை போலீஸார் தேடிவந்தனர். அதே அடையாளத்துடன் விளாத்திகுளம் பேருந்து நிலையம் அருகில் சைக்கிளில் சுற்றிவந்த முதியவரைச் சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
விசாரணையில் அவர், விருதுநகர் மாவட்டம், திருத்தங்கலைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பது தெரியவந்தது. மளிகைக்கடையில் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்டதும், ஆனந்தராமன் என்பவரைக் கத்தியைக் காட்டி மிரட்டியதும் அவர்தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

இது குறித்து போலீஸாரிடம் பேசினோம். ``திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்ட ராஜேந்திரன் மீது விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் 44 வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவற்றொல் 29 வழக்குகள், திருட்டு வழக்குகள். இவர், எங்கெல்லாம் திருடச் செல்கிறாரோ அங்கெல்லாம் சைக்கிளிலேயேதான் செல்வார். சைக்கிளின் பின்புறத்தில் அவரது உடைகளைவைத்து சாமானிய மனிதரைப்போல ரோடு, பஜார், கடைவீதிகளில் வலம்வருவார். பகலில் திருட்டுக்கான சாதக, பாதகங்களை நோட்டமிடுவார்.
பின்னர், இரவில் சென்று திருடுவார். சில நேரங்களில் எந்த ஊருக்கு திருடச் செல்கிறாரோ அந்த ஊரிலேயே சைக்கிளின் பூட்டை உடைத்து திருடி, அதே சைக்கிளில் கடைகளுக்கும் சென்று திருடிவிட்டு வேறோர் இடத்தில் அந்த சைக்கிளையும் விற்றுவிடுவார். அவருக்கு வயது 71. பார்ப்பதற்கு வயதானவராகத் தெரிவதால் அவர்மீது யாருக்கும் பெரிய அளவில் சந்தேகம் வராது.

அதை அவர் தனக்கு ப்ளஸ் பாயின்ட்டாக எடுத்துக்கொண்டு திருடிவந்திருக்கிறார். திருட்டு நடந்த கடைப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து தேடிவந்தோம். விளாத்திகுளம் பேருந்து நிலையப் பகுதியில் மீண்டும் கைவரிசையைக் காட்டுவதற்காக அவர் அங்கேயே சுற்றித் திரிந்தபோது கைதுசெய்தோம்" என்றனர்.