திருப்பத்தூர் அருகேயுள்ள ஆதியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவர் பெங்களூரில் கட்டட ஒப்பந்ததாரராக வேலை செய்துவந்தார். பெருமாளுக்கும் பொம்மிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த துர்காதேவி என்பவருக்கும் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. 15 வயது, 13 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இந்த நிலையில், அடுத்த வாரம் தனது கிராமத்தில் நடைபெறும் திருவிழாவுக்கு அழைப்புவிடுப்பதற்காக மாமியார் வீட்டுக்கு மனைவியுடன் இன்று காலை சென்றார் பெருமாள். அப்போது, கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. கோபமுற்ற பெருமாள் வீட்டிலிருந்த கடப்பாரையை எடுத்து மனைவி என்றும் பாராமல் துர்காதேவியின் தலையில் கொடூரமாகத் தாக்கியிருக்கிறார். இதில், பலத்த காயமடைந்து சுருண்டு விழுந்த துர்காதேவியை உறவினர்கள் ஆட்டோவில் தூக்கிப்போட்டுக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையடுத்து, பிரேத பரிசோதனைக்காக உடல் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்தச் சம்பவம் குறித்து திருப்பத்தூர் தாலுகா போலீஸார் வழக்கு பதிவுசெய்து, பெருமாளைப் பிடித்து விசாரணை நடத்திவருகிறார்கள். மனைவி துர்காதேவியின் அக்காள்மீது பெருமாளுக்கு ஆசை இருந்ததாகவும், அது மனைவிக்குத் தெரியவர, அவரிடமே அக்காவை அடைவதற்கான வழியைக் கேட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில், மனைவியைப் பெருமாள் கொடூரமாக அடித்துக் கொன்றதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. போலீஸாரிம் கேட்டபோது, ``துர்காதேவியின் நடத்தையில் பெருமாளுக்குச் சந்தேகம் இருந்திருக்கிறது. அது தொடர்பான தகராறில்தான் மனைவியை அவர் கொன்றுவிட்டதாகத் தெரிகிறது’’ என்றனர். முரண்பட்ட தகவல்கள் உலாவுவதால், கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் உரிய முறையில் விசாரணை நடத்த வேண்டும் என பாதிக்கப்பட்டோர் தரப்பிலிருந்து வலியுறுத்தியிருக்கிறார்கள்.
