தஞ்சாவூர் மாவட்டம், ஆடுதுறை கஞ்சமேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் நாகராஜன் மகன் விக்னேஸ்வரன் (34). இவர் மயிலாடுதுறை, மயிலம்மன் நகரில் தன்னுடைய பாட்டி பிரேமா வீட்டில் தங்கியிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் ஒருவரைக் காதலித்திருக்கிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சாதாரணமாகப் பேசிப் பழகிய அந்தப் பெண், பின்னர் விக்னேஸ்வரனின் நடவடிக்கை பிடிக்காமல் அவருடன் பேசுவதை நிறுத்தியிருக்கிறார். ஆனால், அதன் பின்னரும் அந்தப் பெண்ணை விக்னேஸ்வரன் பின்தொடர்ந்ததோடு, அவரைக் காதலிப்பதாகக் கூறி, அவர் வீட்டுக்குச் சென்று தகராறிலும் ஈடுபட்டிருக்கிறார்.
இது குறித்து, அந்தப் பெண் வீட்டார் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இரண்டு முறை புகார் அளித்திருக்கின்றனர். இது தொடர்பாக போலீஸார் இரு தரப்பினரையும் அழைத்துப் பேசி, ``இனி அந்தப் பெண்ணை தொந்தரவு செய்யக்கூடாது" என விக்னேஸ்வரனிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர் கடந்த ஜூலை 12-ம் தேதி அந்தப் பெண்ணைக் கடத்த முயன்றிருக்கிறார் விக்னேஸ்வரன். அப்போது அவரிடமிருந்து தப்பித்த இளம்பெண் இது குறித்தும் மயிலாடுதுறை போலீஸில் புகார் அளித்திருக்கிறார். இது தொடர்பாக, `வீடு புகுந்து பெண்ணிடம் தவறாக நடக்க முயன்று, கொலை மிரட்டல் விடுத்ததாக' மயிலாடுதுறை போலீஸார் வழக்கு பதிவுசெய்து விக்னேஸ்வரனைத் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்றிரவு (02.08.2022) சுமார் 7:30 மணியளவில் ஒரு ஸ்கார்பியோ காரிலும், இருசக்கர வாகனத்திலும் பயங்கர ஆயுதங்களுடன் விக்னேஸ்வரன் மற்றும் அவரின் கூட்டாளிகள் சுமார் 15-க்கும் மேற்பட்டோர், அந்த இளம்பெண்ணின் வீட்டுக் கதவை உடைத்துக் கொண்டு அத்துமீறி நுழைந்திருக்கின்றனர். பின்னர், அந்த இளம்பெண்ணை வலுக்கட்டாயமாக அவர் பெற்றோர் முன்னிலையில் கடத்திச் சென்றிருக்கின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து, தகவலறிந்த மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜ் தலைமையிலான போலீஸார், உடனடியாக நிகழ்விடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தியதோடு, வீட்டிலிருந்த சிசிடிவி கேமராப் பதிவுகளைக் கைப்பற்றினர். பின்னர், அதன் மூலம் இளம்பெண் கடத்திச் செல்லப்பட்ட வாகனத்தை மடக்கிப் பிடித்து அவரை மீட்டனர். இளம்பெண்ணைக் கடத்திச் சென்றவர்களையும் கைதுசெய்தனர்.
இந்தச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை டி.எஸ்.பி வசந்தராஜிடம் பேசினோம். ``இதே பெண்ணைக் கடத்த முயன்ற வழக்கில் விக்னேஸ்வரனைத் தேடிவந்தோம். இந்த நிலையில், அந்தப் பெண் கடத்தப்பட்ட தகவலறிந்து 10 நிமிடங்களில் ஸ்பாட்டுக்குச் சென்று, சிசிடிவி கேமரா மூலம் வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளர் விவரத்தைச் சேகரித்தோம். பின்னர் கடத்தல் கும்பலைச் சேர்ந்த நபர் ஒருவரின் செல்போன் எண்ணைக் கண்டறிந்தோம். அதைவைத்து இளம்பெண் கடத்திச் செல்லப்பட்ட கார் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி டோல்கேட் அருகே சென்றுகொண்டிருப்பதை அறிந்தோம்.

நான் ஏற்கெனவே அந்த மாவட்டத்தில் பணியாற்றியிருந்ததால் அந்த மாவட்ட காவல்துறையினரை அழைத்து உடனடியாகத் தகவலைச் சொல்லி அலர்ட் செய்தேன். அவர்களும் டோல்கேட்டில் அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்து இளம்பெண்ணை மீட்டனர். மேலும், கடத்தலில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்தனர். இந்தக் கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 17 பேரில் இதுவரை 8 பேரைக் கைதுசெய்திருக்கிறோம். அவர்கள்மீது 307,366,506 (2) உள்ளிட்ட 10 கடுமையான பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கின்றனர். மற்றவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். கடத்தப்பட்ட 3 மணி நேரத்தில் இளம்பெண் மீட்கப்பட்டிருக்கிறார்" என்றார்.