திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றத்தை அடுத்த வடகரை பாபா நகரைச் சேர்ந்தவர் சதீஷ் (35). இவர், கொளத்தூரை அடுத்த ராஜமங்கலம் காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் 1.2.2023-ம் தேதி மயங்கிய நிலையில் சதீஷ் கிடப்பதாக செங்குன்றம் காவல் நிலையத்துக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தபோது காவலர் சதீஷ், மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த நிலையில், சதீஷின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக போலீஸார் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர், சதீஷ் தற்கொலை செய்துகொண்டதற்கு என்ன காரணம் என விசாரித்துவருகின்றனர்.

இது குறித்து செங்குன்றம் போலீஸார், ``தற்கொலை செய்துகொண்ட சதீஷ், 2013-ம் ஆண்டு காவல்துறையில் பணிக்குச் சேர்ந்தார். 35 வயதான நிலையில் அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதனால் மனவருத்தத்தில் இருந்ததாக அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர். மேலும், சதீஷுக்கு மது அருந்தும் பழக்கமும் இருந்திருக்கிறது. அதனால் கடந்த சில தினங்களாக அவர் சரிவர வேலைக்குச் செல்லாமல் இருந்திருக்கிறார். இந்த இரண்டுதான் சதீஷின் தற்கொலைக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதுகிறோம். பிரேத பரிசோதனைக்குப் பிறகு சதீஷின் சடலத்தை அவரின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்திருக்கிறோம்" என்றனர்.