Published:Updated:

கோவில்பட்டி: ரூ.10 லட்சம் கேட்டுக் கடத்தப்பட்ட கோயில் பூசாரி; சிசிடிவி பதிவால் மீட்ட போலீஸார்..!

மீட்கப்பட்ட கோயில் பூசாரி
News
மீட்கப்பட்ட கோயில் பூசாரி

தூத்துக்குடியில் கோயில் பூசாரியை காரில் கடத்திய கும்பல் அவரின், மனைவியிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Published:Updated:

கோவில்பட்டி: ரூ.10 லட்சம் கேட்டுக் கடத்தப்பட்ட கோயில் பூசாரி; சிசிடிவி பதிவால் மீட்ட போலீஸார்..!

தூத்துக்குடியில் கோயில் பூசாரியை காரில் கடத்திய கும்பல் அவரின், மனைவியிடம் ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மீட்கப்பட்ட கோயில் பூசாரி
News
மீட்கப்பட்ட கோயில் பூசாரி

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகேயுள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம். இவர், விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அவரின் மனைவி மனிஷாவுடன் வசித்துவருகிறார். இவர், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலத்திலுள்ள சாய்லிங்கா ஆலயத்தில் பூசாரியாக இருக்கிறார்.

இந்த நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு 9 மணிக்கு கோயிலில் பூஜையை முடித்துவிட்டு, உமையலிங்கமும், அவரின் நண்பரான கோமதிராஜூவும் மோட்டார் சைக்கிளில் சாத்தூருக்குச் சென்றுகொண்டிருந்தனர். 

கோவில்பட்டி
கோவில்பட்டி

அப்போது அவர்களைப் பின்தொடர்ந்து, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் பூசாரி உமையலிங்கத்தை வழிமறித்தனர். அப்போது அங்கு ஒரு கார் வந்தது. காரிலிருந்து இறங்கிய ஐந்து பேருடன், மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் என ஏழு பேர் சேர்ந்து உமையலிங்கம், கோமதிராஜ் ஆகிய இருவரையும் சரமாரியாகத் தாக்கினர். கோமதிராஜை துரத்தி விட்டுவிட்டு, உமையலிங்கத்தின் கை, கால்களைக் கட்டி காரின் பின்இருக்கையில் அமர வைத்துக்கொண்டு கடத்திச் சென்றனர்.

உமையலிங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தை கோமதிராஜ் அவரின் மனைவி மனிஷாவிடம் கூறினார். அவர் கணவர் கடத்தப்பட்டது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகாரளித்தார். 

இதைத் தொடர்ந்து, கோவில்பட்டி டி.எஸ்.பி வெங்கடேஷ் தலைமையில் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் ஆகியோரின் தலைமையிலான போலீஸார், பாண்டவர்மங்கலம் பகுதியிலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்தனர்.  உமையலிங்கம் கடத்தப்பட்ட காரின் பதிவெண்ணை வைத்து விசாரணை நடத்தினர்.

அந்த கார், சாத்தூர் பகுதியில் நிற்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கிடையே, உமையலிங்கத்தின் மனைவிக்கு போன் செய்த அந்தக் கும்பல், `10 லட்ச ரூபாய் கொடுத்தால்தான், அவரை விடுவிப்போம்' என மிரட்டியிருக்கின்றனர். இதையடுத்து, போலீஸாரின் அறிவுரைப்படி மனிஷா, அந்தக் கும்பலைத் தொடர்புகொண்டு `7 லட்ச ரூபாய்தான் தர முடியும்' எனச் சொல்லி பேசியிருக்கிறார். அந்தக் கும்பலும் சம்மதித்து பணத்துடன் ராஜபாளையத்துக்கு வரும்படி கூறியிருக்கின்றனர்.

கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்
கோவில்பட்டி மேற்கு காவல் நிலையம்

இதையடுத்து, மனிஷாவும், கோமதிராஜூம் ராஜபாளையத்துக்குச் சென்றனர். அங்கு பஜாரில் கார் வந்து நின்றது. மறைந்திருந்த போலீஸார், காரைச் சுற்றிவளைக்க முயன்றனர். இதைப் பார்த்து, காரிலிருந்து ஆறு பேர் தப்பியோடினர். காரை ஓட்டிவந்த மனோகர் மட்டும் சிக்கினார். உடனடியாக காரில் இருந்த பூசாரி உமையலிங்கத்தை மீட்ட போலீஸார் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்து தப்பியோடிய ஆறு பேர் கொண்ட கும்பலை போலீஸார் தேடிவருகின்றனர்.