சமீபகாலமாக கடன் வழங்கும் மொபைல் ஆப்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த மொபைல் ஆப்பை நமது மொபைல்போனில் பதிவிறக்கம் செய்தாலே போதும். வெறும் ஆதார் கார்டு, பான் கார்டு, வங்கி விவரத்தைக் கொடுத்தாலே கேட்கும் கடனைக் கொடுத்துவிடுவார்கள். சமீபத்தில் மும்பையில் கடன் வழங்கும் மொபைல் ஆப் ஒன்றைப் பதிவிறக்கம் செய்த நபர், கடன் வாங்காமலேயே கடன் பெற்றதாகக் கூறி கடனைத் திருப்பிச் செலுத்தும்படி மர்ம நபர்கள் சித்ரவதை செய்தனர். இதனால் மன அழுத்தம் காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டார்.
தற்போது மும்பை மலாடு பகுதியைச் சேர்ந்த அனுராக் சிங் (27) என்ற வாலிபர் ஃபேஸ்புக்கில் வந்த கடன் கொடுக்கும் மொபைல் ஆப் தொடர்பான ஒரு விளம்பரத்தைப் பார்த்தார். உடனே Hedisy Loan App என்ற மொபைல் ஆப்பை தனது மொபைலில் பதிவிறக்கம் செய்தார்.

அதில் கேட்டபடி ஆதார் கார்டு, பான் கார்டு விவரங்களைப் பதிவேற்றம் செய்தார். அதோடு தனது வங்கி விவரங்களைப் பதிவிட்டு தனது மொபைலில் இருக்கும் தொடர்பு எண்களைப் பார்க்க அனுமதியும் கொடுத்திருந்தார். ஆனால் கடன் கேட்டு விண்ணப்பிக்கவில்லை. ஒரு சில நாள்களில் சிங் வங்கி கணக்குக்கு 3,805 ரூபாய் கிரெட் செய்யப்பட்டிருப்பதாகத் தகவல் வந்தது.
உடனே அதிர்ச்சியடைந்த சிங் அந்தப் பணத்தை திருப்பிக் கட்டிவிடத் திட்டமிட்டார். அதற்குள் பணம் வங்கிக்கு வந்து 6 நாள்கள் ஆகிவிட்டன. உடனே 6 நாள் வட்டி எவ்வளவு என்று கேட்டதற்கு 7 ஆயிரம் என்று போனில் பேசிய நபர் தெரிவித்தார். உடனே எப்படி இவ்வளவு வட்டி என்று கேட்டதற்கு, போனில் பேசிய நபர் கண்டபடி திட்டியதோடு, உனது மொபைல் போனில் இருக்கும் தொடர்பு எண்களுக்கு மார்பிங் செய்த போட்டோக்களை அனுப்பி, உனது பெயரைக் கெடுத்துவிடுவேன் என்று மிரட்டினார். இது குறித்து சிங் கூறுகையில், ``கேட்காமல் கொடுத்த 3,805 ரூபாய் கடனுக்கு 7 ஆயிரம் வட்டி கட்டச் சொல்லி மிரட்டினர். அதோடு எனது நண்பர்களுக்கும் நான் கடன் எடுத்துவிட்டு கட்டவில்லை என்று கூறி மெசேஜ் அனுப்பிவைத்தனர். இதனால் அவர்கள் போன் நம்பரை பிளாக் செய்தனர். அதோடு இது குறித்து போலீஸிலும் புகார் செய்துள்ளேன்” என்று தெரிவித்தார்.
கடந்த மாதம் மும்பை அந்தேரியைச் சேர்ந்த ஸ்வரூப் (38) என்பவர் Crazy Cash என்ற மொபைல் ஆப்பைப் பதிவிறக்கம் செய்தார். ஆனால் கடன் பெறவில்லை. கடன் பெற்றதாக மொபைல் போனில் தொடர்ச்சியாக மிரட்டல் வந்தது. இது தொடர்பாக கடந்த மாதம் 16-ம் தேதி போலீஸில் புகார் செய்தார். ஆனால் இன்னும் இதுவரை யாரும் கைதுசெய்யப்படவில்லை. பாந்த்ராவைவ் சேர்ந்த சோஹைல் ஷேக் என்பவர் மொபைல் ஆப் மூலம் 3,500 ரூபாய் கடன் பெற்றார். ஆனால் அதற்கு 2,500 வட்டி கட்டச்சொல்லி மிரட்டல் வந்தது. இதனால் இது குறித்து கடந்த 3-ம் தேதி போலீஸில் புகார் செய்துள்ளார். இது போன்ற புகார்கள் அடிக்கடி மும்பை போலீஸாருக்கு வந்து கொண்டேயிருக்கின்றன. மொபைல் ஆப்பில் கடன் பெற்ற 19 வயதுப் பெண்ணுக்கு மார்பிங் செய்த போட்டோவை அனுப்பியது தொடர்பாக போலீஸில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் கர்நாடகாவைச் சேர்ந்த கடன் வசூலிப்பு ஏஜென்ட் ஒருவர் கைதுசெய்யப்பட்டார். பெரும்பாலான புகார்களில் கடன் கேட்டு மிரட்டும் ஏஜென்ட்டுகள் கைதுசெய்யப்படுவதில்லை.