ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின்பேரால் உக்ரைன் மீது நடத்தப்பட்டுவரும் தாக்குதலை பயங்கரவாதம் என்று விமர்சித்த புதின் கட்சியின் உறுப்பினரும், சட்டமியற்றுபவருமான பாவெல் அன்டோவ் (Pavel Antov) கடந்த ஞாயிற்றுக்கிழமை திடீரென மரணமடைந்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.
கடந்த டிசம்பர் 21-ம் தேதியன்று பாவெல் அன்டோவ் தன்னுடைய 66-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காக மூன்று நண்பர்களுடன் ஒடிசாவிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றுக்கு வந்திருக்கின்றார். அன்றிரவு இவர்கள் நன்றாக மது அருந்திவிட்டு ஹோட்டலில் அவரவர் தங்கியிருந்த அறைக்குச் சென்றுவிட்டனர். அடுத்தநாள் காலையில் அவர்களுள் விளாடிமிர் புடானோவ் (Vladimir Budanov) என்பவர் அவரது அறையில் இறந்துகிடந்திருக்கிறார்.

இந்த செய்தியைக் கேட்டு அங்குவந்த போலீஸார் விசாரித்ததில், இறந்தவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட பிரச்னை இருந்ததாகவும், அதிகளவு மது அருந்தியிருந்ததால் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டது. விளாடிமிர் புடானோவ் உயிரிழந்த இரண்டு நாள்களுக்குப் பிறகு, பாவெல் அன்டோவ் அதே ஹோட்டலின் மூன்றாவது மாடியிலிருந்து கீழே விழுந்து ரத்த வெள்ளத்தில் மரணமடைந்திருக்கிறார். ஒரே வாரத்தில் இரண்டு ரஷ்யர்கள் அதே ஹோட்டலில் உயிரிழந்த சம்பவம் பலருக்கும் சந்தேகத்தைக் கிளப்பியது. இருப்பினும் ராயகடா போலீஸ், பாவெல் அன்டோவின் இந்த மரணம் தற்கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகத் தெரிவித்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய விசாரணை அதிகாரி எஸ்.பி விவேகானந்த சர்மா, ``டிசம்பர் 21-ம் தேதி ராயகடாவில் உள்ள ஹோட்டலில் நான்கு பேர் தங்கவந்தனர். டிசம்பர் 22-ம் தேதி காலை அவர்களில் ஒருவர் இறந்தார். பிரேத பரிசோதனையில் அவருக்கு இதயம் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதில், தன் நண்பன் உயிரிழந்ததன் காரணமாக பாவெல் அன்டோவ் மிக மன அழுத்தத்தில் இருந்திருக்கிறார். தற்போது டிசம்பர் 25-ம் தேதியன்று உயிரிழந்தார்" எனக் கூறினார்.
கடந்த ஜூலையில், பாவெல் அன்டோவின் வாட்ஸ்அப் கணக்கிலிருந்து, `உக்ரைன் மீதான தாக்குதல் பயங்கரவாதம்' என ஒரு குறுஞ்செய்தி வெளியாகியிருந்தது. ஆனால் பாவெல் அன்டோ, இதனை வேறு யாரோ ஒருவரால் வெளியானது என்று கூறி மன்னிப்பு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.