சேலம் ஓமலூர், வெள்ளாளப்பட்டியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று அன்பழகனின் வீட்டிற்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் பணம் கேட்டுள்ளது. அன்பழகன் தர மறுத்ததால், அவரைக் கடத்தி கன்னங்குறிச்சி பகுதியில் உள்ள வனப்பகுதிக்கு கொண்டு சென்று அடித்து 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளனர். மேலும், `தரவில்லை என்றால், இங்கயே கொன்று புதைத்துவிடுவோம்' என்றும் மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அவர் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள தனது தங்கைக்கு போன் செய்து 1 லட்சம் ரூபாய் தயார் செய்துகொடுத்துள்ளார். அவரிடம் பணத்தை பெற்றுக்கொண்ட கும்பல் காட்டுக்குள்ளேயே அவரை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளது.
பின்னர், அங்கிருந்து வீடு திரும்பிய அன்பழகன் இதுகுறித்து காவல்துறையில் புகார் அளித்தார். அவர் புகாரின் பேரில், மாநகர காவல் ஆணையர் நஜ்மல் ஹோதா, சம்பந்தப்பட்ட கடத்தல் கும்பலைப் பிடிக்க உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து உதவி ஆணையர் நாகராஜன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். இந்த நிலையில், சேலம் சின்னதிருப்பதி பகுதியைச் சேர்ந்த பிரபல ரௌடி சித்தேஸ்வரன் தலைமையில் கடத்தல் சம்பவம் அரங்கேறியது தெரியவந்தது.

சித்தேஸ்வரன் தலைமையிலான கடத்தல் கும்பல் இரும்பாலை மெயின்ரோட்டில் சுற்றுவதாக தனிப்படையினருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்து, இரும்பாலை மெயின்ரோடு டாக்டர்ஸ் காலனி பிரிவு ரோட்டில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, அந்த வழியாக வேகமாக வந்த சொகுசுக் காரை மடக்கி சோதனையிட்டனர். அதில் தேடப்பட்டுவரும் பிரபல ரௌடிகள் சித்தேஸ்வரன், அரவிந்த் ஆகியோர் கைது செய்தனர்.
பின்னர் அவர்கள் வைத்திருந்த ஆயுதங்களைக் கைப்பற்றிய போலீஸார், இருவரையும் விசாரித்ததில் கடத்தலில் இலியாஸ், அஜித், தீபன் ஆகிய ரௌடிகள் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, அன்பழகனை கடத்தி வைத்திருந்த இடத்தை அடையாளம் காண, போலீஸார் சித்தேஸ்வரன் மற்றும் அரவிந்தனை அழைத்து செல்லும்போது, அங்கு மறைத்து வைத்திருந்த கத்தியை போலீஸாரின் கையில் கொடுத்துவிட்டு மற்றொரு கத்தியை தேடுவதுபோல நடித்து தப்பிக்க முயற்சி செய்தனர். அப்போது போலீஸார் விரட்டிப் பிடிக்கபோகும் போது எதிர்பாராதவிதமாக ரௌடிகள் இருவரும் தவறி பள்ளத்தில் விழுந்து கால் முறிவு ஏற்பட்டதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.