சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்துவருபவர் முகமது சையத். பி.காம் வரை படித்துள்ளார். இவர், சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆசைப்பட்டதால் தினமும் உடற்பயிற்சி செய்து சிக்ஸ்பேக் இளைஞனாக வலம்வந்தார். ஆனால் சினிமாவில் வாய்ப்புகள் கிடைக்காததால் கல்லூரிப் படிப்பு முடிந்ததும் மாடலிங்துறைக்குள் நுழைந்தார்.

அப்போது அவருக்கு அறிமுகமான மாடலிங்துறையைச் சேர்ந்த இளம்பெண்களுடன் முகமது சையத், நெருங்கிப் பழகினார். அவர்களில் சில பெண்களைத் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தைகளைக் கூறி, பாலியல் வன்கொடுமை செய்தார். அதை அந்தப் பெண்களுக்கே தெரியாமல் வீடியோவாக எடுத்து, பணம் கேட்டு மிரட்டிவந்தார்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
முகமது சையத்தால் பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயனைச் சந்தித்து புகாரளித்தனர். இது தொடர்பாக வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிவுசெய்து கடந்த மார்ச் மாதம், முகமது சையத்தைக் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். முகமது சையத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கீழ் கைதுசெய்ய இணை கமிஷனர் பிரபாகரன், கீழ்ப்பாக்கம் துணை கமிஷனர் கார்த்திகேயன், உதவி கமிஷனர் அரிக்குமார் ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். அதற்கான ஏற்பாடுகளை வேப்பேரி அனைத்து மகளிர் போலீஸார் மேற்கொண்டனர்.

இதையடுத்து முகமது சையத்தை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று உத்தரவிட்டார். இந்த உத்தரவையடுத்து சிறையிலிருக்கும் முகமது சையத் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. அதனால் அவரால் இனி ஓராண்டுக்கு சிறையிலிருந்து வெளியில் வர முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.