இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அங்கு வாழ வழியின்றி மக்கள் கடல்வழியாக படகுகள் மூலம் தமிழகத்துக்குள் அகதிகளாக நுழைந்துவருகின்றனர். இதுவரை 22 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வந்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு, மண்டபம் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 22-ம் தேதி கணவரால் கைவிடப்பட்ட பெண், தனது இரண்டு குழந்தைகளுடன் கள்ளத்தோணி மூலம் இலங்கையிலிருந்து ராமேஸ்வரம் வந்திருக்கிறார். அவர்களை மரைன் போலீஸார் மீட்டு மண்டபம் முகாமில் தங்கவைத்தனர்.

இந்நிலையில் மரைன் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர் அன்பு என்பவர், கணவரால் கைவிடப்பட்ட இலங்கைப் பெண் அகதியிடம் செல்போன் நம்பரை வாங்கி, அவரிடம் பேசிப் பழகி வந்துள்ளார். இதையடுத்து நேற்று முன்தினம் முகாமில் வீட்டில் தனியாக இருந்த அப்பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த காவலர் அன்பு, அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் என புகார் எழுந்தது. இதனால், அப்பெண் கூச்சலிடவே அருகில் இருந்த அகதிகள் அங்கு ஓடி வந்தனர். இதையடுத்து அன்பு சுவர் ஏறி குதித்து தப்பிச் சென்றுவிட்டார்.
இது தொடர்பாக அந்தப் பெண் கொடுத்த புகாரின்பேரில் மரைன் ஏடி.எஸ்.பி பாலகிருஷ்ணன் விசாரணை நடத்திய நிலையில் அன்பு ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி கார்த்திக், காவலர் அன்புவை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.
