`143 பேர்; 42 பக்க எஃப்.ஐ.ஆர்!’ - தெலங்கானாவை அதிரவைத்த பாலியல் புகார்

தெலங்கனா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வெவ்வேறு காலகட்டங்களில் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக 143 பேர்மீது புகாரளித்திருக்கிறார்.
ஹைதராபாத்தின் பஞ்சகுட்டா காவல் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த புகாரை அடுத்து, போலீஸார் 42 பக்கத்தில் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்திருக்கிறார்கள். மொத்தமுள்ள 42 பக்கங்களில், 41 பக்கங்களில் 143 பேரின் விவரங்கள் இடம்பெற்றிருக்கின்றன. வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர், அந்தப் பெண்ணை பஞ்சகுட்டா போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பியிருக்கிறார்கள்.

புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களில் சில பெண்களின் பெயர்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதேபோல், அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள், திரைப்படத்துறையில் பணிபுரிபவர்கள், மாணவர்கள், ஊடகங்களில் பணிபுரிபவர்கள் எனப் பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள், பல்வேறு காலகட்டங்களில் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் குற்றம்சாட்டியிருக்கிறார். அந்தப் பெண் கொடுத்த புகாரில் குறிப்பிடப்பட்டவர்கள் ஒவ்வொருவரிடமும் தனியாக விசாரணையை பஞ்சகுட்டா போலீஸார் தொடங்கியிருக்கிறார்கள்.
கணவரிடமிருந்து விவகாரத்துப் பெறுவதற்கு முன்னர், கணவரின் குடும்பத்தைச் சேர்ந்த சிலரும் தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாக அந்தப் பெண் கொடுத்திருக்கும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல வருடங்களாக நடந்த இந்தக் கொடுமையால் தனக்குக் கடுமையான மன உளைச்சல் ஏற்பட்டதாகவும், முதன்முறையாகத் தற்போதுதான் போலீஸில் புகார் கொடுத்திருப்பதாகவும் அந்த 25 வயது பெண் கூறியிருக்கிறார். இந்தப் பாலியல் புகார் தெலங்கானா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.