உத்தரப்பிரதேச மாநிலம், லலித்பூர் மாவட்டம், சிலாவன் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு திவாரி. கடந்த 2000-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் திவாரி மீது ஒரு பெண்ணும், அவரின் கணவர், மாமனாரும் பாலியல் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் திவாரி கைதுசெய்யப்பட்டார். நிலப் பிரச்னையில் அந்தப் பெண்ணின் குடும்பம் போலி வன்கொடுமை புகார் கொடுத்திருந்தனர் எனக் கூறப்படுகிறது. இரண்டு ஆண்டுகள் விசாரணைக் கைதியாக இருந்த திவாரிக்கு, 2003-ம் ஆண்டு லலித்பூர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
2005-ம் ஆண்டு திவாரி தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் மேல் முறையீட்டு மனுவில் தேவையான ஆவணங்கள் இணைக்கப்படவில்லை. இதனால் வழக்கு விசாரிக்கப்படாமல் கிடந்தது. அதன் பிறகு நீண்ட நாள்களுக்குப் பின்னர் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்தது.

16 ஆண்டுகளுகளாக நடந்த இவ்வழக்கு விசாரணையில் கடந்த ஆண்டு, மார்ச் மாதம் திவாரியை நீதிமன்றம் விடுதலை செய்தது. வன்கொடுமை வழக்கிலிருந்து திவாரி விடுவிக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனை அறிக்கை வன்கொடுமையை நிரூபிப்பதாக இல்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண் புகார் கொடுக்கவில்லை என்றும், அவரின் உறவினர்கள்தான் புகார் கொடுத்திருப்பதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.
கடந்த ஆண்டு குற்றமற்றவர் எனச் சிறையிலிருந்து வெளியில் வந்த திவாரிக்கு ஊர் மக்கள் பண உதவி செய்துள்ளனர். சிறையில் இருந்து வந்தபோது திவாரிக்கு 43 வயதாகியிருந்தது. எனினும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று கருதி திருமணம் செய்ய பெண் தேடினார். பக்கத்து ஊரில் அவருக்குப் பெண் கிடைத்தது. இதையடுத்து எளியமுறையில் திருமணம் நடைபெற்றது. ஆனால் திருமணம் முடிந்த மறுநாளே திவாரிக்கு ஓர் அதிர்ச்சி காத்திருந்தது. அவரின் மனைவி வீட்டில் இருந்த ஒரு லட்சம் மதிப்புள்ள நகை மற்றும் பணத்துடன் கணவரைவிட்டு சென்றுவிட்டார். இது குறித்து திவாரி போலீஸில் புகார் செய்திருக்கிறார். கையிலிருந்த சிறிது பணத்தைக்கொண்டு திருமணம் செய்து புதிய வாழ்க்கையைத் தொடங்கலாம் என்று நினைத்தவருக்கு அதுவும் கைகூடாமல் போய்விட்டது. குறிப்பிட்ட அந்தப் பெண், முன்னரே சில மோசடி வழக்குகள் தொடர்புடையவர் என விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
