தேனி மாவட்டம், போடி சிலமலை அருகேயுள்ள சுடுகாட்டில் இளைஞர்கள் ஒன்றுகூடி போதை வஸ்துக்களைப் பயன்படுத்தி வருவதாகப் புகார் எழுந்தது. இதைத் தொடர்ந்து, நேற்று மாலை 6 மணியளவில் போடி தாலுகா காவல் சார்பு ஆய்வாளர் இத்தீஸ்கான் தலைமையில் போலீஸார், சுடுகாட்டில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சுடுகாட்டிலிருந்து ஆறு இளைஞர்கள் காவலர்களைக் கண்டு தப்பி ஓடினர். அதில் தப்பி ஓடிய மூன்று இளைஞர்களைத் தாலுகா போலீஸார் கைதுசெய்தனர்.

அவர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், போதை ஊசிப் பயன்படுத்தியவர்கள் போடி சிலமலையைச் சேர்ந்த சுஜித் குமார், திவின் குமார், தமிழ்ச்செல்வன் ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் தப்பி ஓடிய மூன்று இளைஞர்கள் ராசிங்காபுரத்தைச் சேர்ந்த கார்த்திக், சிலமலையைச் சேர்ந்த பிரவீன், பரத் குமார் என்பதும் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து கைதுசெய்யப்பட்ட மூன்று பேரிடமிருந்து மூன்று ஊசிகள், ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும் மருந்தையும் கைப்பற்றினர்.
இந்த மருந்தானது கர்ப்பிணிகள், இதய நோய் உள்ளவர்களுக்கும், அறுவை சிகிச்சை செய்வதற்கும் பயன்படுத்தக்கூடிய மருந்து. இந்த மருந்தை தற்போது இளைஞர்கள் போதை ஊசியாகப் பயன்படுத்திவருகின்றனர். போடி தாலுகா காவல்துறையினர் கைதுசெய்யப்பட்ட இளைஞர்களிடமிருந்து மருந்து எங்கே வாங்கப்பட்டது... மேலும் யாரெல்லாம் இந்தப் போதை ஊசிப் பழக்கத்துக்கு அடிமையாகியிருக்கின்றனர் என்பதைப் பற்றி விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

ஏற்கெனவே திருச்சியிலிருந்து பேருந்து பார்சல் சர்வீஸ் மூலம் வாங்கப்பட்ட மருந்துகளை, போதை ஊசிகளாக வியாபாரம் செய்தும், பயன்படுத்தியும் வந்த தேனியைச் சேர்ந்த 18 இளைஞர்களை தனிப்படை போலீஸார் கைதுசெய்தது குறிப்பிடத்தக்கது.