சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மறவமங்கலம் பல்லாக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் சரவணன் (52). இவர் சவூதி அரேபியாவில் நீண்ட வருடம் வேலைபார்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு சொந்த ஊருக்குத் திரும்பியவர், மாட்டு வண்டி வைத்து ஆற்று மணல் கடத்தி வந்துள்ளார். மணல் பரப்பில் லோடு இழுக்க மாடுகள் சற்று திணற, ஒட்டகத்தை வைத்து மணல் எடுத்து வர முடிவு செய்திருக்கிறார். இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் இருந்து ஒட்டகம் ஒன்றை வாங்கி வளர்த்து வந்தார். அந்த ஒட்டகத்தை டயர் வண்டியை இழுக்க வைத்து, ஆற்று மணலைக் கடத்தி வந்துள்ளார்.

இந்த நிலையில்தான், இரவு நேரத்தில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்ட போது, சரவணன் ஒட்டகத்தை வைத்து மணல் கடத்தியதைக் கண்டுபிடித்தனர். இதையடுத்து டயர்வண்டியையும், ஒட்டகத்தையும் பறிமுதல் செய்த போலீஸார் மறவமங்கலம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். அதே நேரத்தில் ஒட்டகத்தைப் பராமரிப்பதில் போலீஸாருக்கு சிரமம் ஏற்பட, ஒட்டகத்தை அதன் உரிமையாளரிடமே ஒப்படைத்திருக்கின்றனர். தாங்கள் அழைக்கும் போது ஒட்டகத்தோடு வர வேண்டும் என்று அனுப்பி வைத்ததாகக் கூறப்படுகிறது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
டிப்பர் லாரிகள், டிராக்டர்களில் மணல் கடத்தல் அதிகம் நடைபெற்று வரும் நிலையில், சிவகங்கையில் ஒட்டகத்தை வைத்து நூதன திருட்டில் ஈடுபட்டிருப்பது காவலர்களை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.