திருச்சி திருவானைக்காவல் நரியன் தெருவைச் சேர்ந்தவர் கெளரி சங்கர் (33). இவர் மண்ணச்சநல்லூர் அருகேயுள்ள வெங்ககுடியில் தேங்காய்நாரில் கயிறு தயாரிக்கும் கம்பெனி நடத்திவந்தார். திருச்சியைச் சேர்ந்த பிரபல ரெளடிகளின் நண்பரான இவர்மீது ஸ்ரீரங்கம், மண்ணச்சநல்லூர், சமயபுரம் காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. இப்படிப்பட்ட ரெளடியான கெளரி சங்கரை ஒரு கும்பல் ஸ்கெட்ச் போட்டு துடிக்கத் துடிக்க வெட்டிச் சாய்த்திருக்கிறது.

சமயபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் நேற்று மாலை ரெளடி கெளரி சங்கருக்கு போன் செய்து, `அண்ணே இன்னைக்கு எனக்குப் பிறந்தநாள். உங்ககிட்ட ஆசீர்வாதம் வாங்கணும். உங்களை நேர்ல பார்க்க வர்றேன்’ என்றிருக்கிறார். கெளரி சங்கர் ஓகே சொல்ல, பிறந்தநாள் கேக்குடன் நண்பர்கள் சிலரை அழைத்துக்கொண்டு, கெளரி சங்கரின் கம்பெனிக்குச் சென்றுள்ளது கார்த்திக் அண்ட் கோ. கேக் வெட்டி கொண்டாடிவிட்டு, அனைவரும் ஒன்றாக மது அருந்த ஆரம்பித்துள்ளனர். ஒருசில ரவுண்டுகளுக்குப் பிறகு கெளரி சங்கர் நிதானமிழக்க, கார்த்திக்கும் அவருடைய நண்பர்களும் மறைத்துவைத்திருந்த அரிவாளை எடுத்து கெளரி சங்கரை சரமாரியாக வெட்டிச் சாய்த்துள்ளனர்.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே கெளரி சங்கர் உயிரிழந்தார். கொலைக்குப் பின்னர் அவர்கள் கெளரி சங்கரின் உடலுக்கு மாலை போட்டுவிட்டுச் சென்றிருக்கின்றனர். அதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மண்ணச்சநல்லூர் போலீஸார், கெளரி சங்கரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். முதற்கட்டமாக கார்த்திக், சித்தார்த்தன் உட்பட சிலரைப் பிடித்து போலீஸார் விசாரித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் குறித்து விஷயமறிந்த போலீஸார் சிலரிடம் பேசினோம். ``ஆறு மாதங்களுக்கு முன்பு சித்தார்த்தன், அவருடைய தம்பியை ஏதோ ஒரு பிரச்னைக்காக கெளரி சங்கர் அடித்திருக்கிறார் எனக் கூறப்படுகிறது. அந்த சம்பவத்துக்குப் பழிவாங்க ஸ்கெட்ச் போட்டு இப்போது இந்தச் சம்பவத்தை அரங்கேற்றியிருக்கிறார். இத்தனைக்கும் கார்த்தி, சித்தார்த்தன் கும்பல் மீது வழிப்பறி, பிக்பாக்கெட் போன்ற வழக்குகள்தான் இருக்கின்றன. கொலை செய்யும் அளவுக்கு இவர்கள் பெரிய ரெளடிகலெல்லாம் இல்லை. குடி போதையில் நிதானமில்லாத சமயம் பார்த்து கெளரி சங்கரை வெட்டிக் கொன்றிருக்கின்றனர். இந்தக் கொலைக்குப் பின்னர் வேறு ஏதாவது காரணங்கள் இருக்கின்றனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது” என்றனர்.