கொரோனா வைரஸ் காரணமாக வெளிநாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதேநேரத்தில், `வந்தே பாரத்’ திட்டத்தின்கீழ், வெளிநாடுகளில் தவித்துவரும் இந்தியர்கள் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். அதன்படி, துபாயிலிருந்து கோவை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதனடிப்படையில், கோவை வந்த பயணிகளிடம் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை சேர்ந்த ஒரு தம்பதியரின் நடவடிக்கைகளைப் பார்த்து அதிகாரிகள் சந்தேகமடைந்தனர்.
அவர்களது உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது எதுவும் கிடைக்கவில்லை. பிறகு, இருவரையும் தனியறையில் வைத்து சோதனை செய்தனர். அப்போது உள்ளாடைகளில் ஆறு பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. `Paste form’ என்ற முறையில் தங்கத்தைப் பொடியாக்கி, கெமிக்கல்களுடன் கலந்து, உள்ளாடையில் தைத்து எடுத்துவந்ததும் தெரியவந்தது.

Paste form முறையில் கடத்தினால், அவற்றைப் பரிசோதனைக் கருவிகளால் கண்டுபிடிக்க முடியாது. இதைத்தொடர்ந்து, அந்தத் தம்பதியரிடமிருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்புள்ள, 2,163 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இது குறித்து அந்தத் தம்பதியரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் தெரியவந்ததாவது... அவர்கள் கடந்த மார்ச் மாதம் அரபு நாடுகளுக்குச் சுற்றுலா சென்றிருக்கிறார்கள். கொரோனா தாக்கத்தால் கையிலிருந்த பணம் செலவான நிலையில் சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் தவித்திருக்கிறார்கள். அப்போது ஒரு கும்பல் அந்தத் தம்பதியருக்கு உதவி செய்வதாகச் சொல்லி, தங்கம் கடத்திவரச் சொல்லியிருக்கிறார்கள். வேறு வழியில்லாமல் அந்தத் தம்பதியரும் தங்கத்தைக் கடத்தியிருக்கிறார்கள்.

அவர்கள் இருவரையும் கைது செய்த வருவாய்ப் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இந்தக் கடத்தலுக்கு மூளையாகச் செயல்பட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கோவை விமான நிலையத்தில் Paste form வடிவில் தங்கம் பிடிபட்டது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது