ஓடும் ரயிலிலிருந்து தாய், மகளை கீழே தள்ளிய கொள்ளையர்கள்!- உத்தரப்பிரதேசத்தில் நடந்த பயங்கரம்
உத்தரப்பிரதேசத்தில் ஓடும் ரயிலில் இருந்து தாய் மற்றும் மகள் கீழே தள்ளி கொலை செய்யப்பட்டுள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த மனிஷா பொறியியல் தேர்வுக்கான பயிற்சி நிறுவனத்தில் சேருவதற்காக தன் தாய் மீனா மற்றும் சகோதரன் ஆகாஷுடன் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவுக்கு பயணமாகியுள்ளார். இதற்காக டெல்லியிலிருந்து கோட்டா செல்லும் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்றுள்ளனர்.

ரயில் உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா மாவட்டத்தில் சென்றுகொண்டிருந்தபோது கொள்ளையர்கள் மீனாவின் உடைமைகளை தூக்கிச்சென்றுள்ளனர். இதைக்கண்டதும் அவர் திருடன் என கூச்சலிட்டுள்ளார். அந்தப் பையில் செல்போன், பொறியியல் பயிற்சிக்கான விண்ணப்பம், காசோலை, சான்றிதழ்கள் போன்றவை இருந்துள்ளன. மீனாவின் சத்தம் கேட்டு மனிஷாவும் எழுந்துள்ளார். இருவரும் கொள்ளையர்களுடன் போராடியுள்ளனர். தாய் மற்றும் மகளை அந்தப்பெட்டியில் நுழைவு வாயிலுக்கு இழுத்துச்சென்ற கொள்ளையர்கள் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.
இதைக்கண்ட ஆகாஷ் உடனடியாக ரயிலில் இருந்த அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்த முயன்றுள்ளார். ரயில் விருந்தாவன் நிறுத்தத்தை அடைந்தது. இதைப் பயன்படுத்தி கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். நடந்த சம்பவத்தை ரயில்வே காவலர்களிடம் ஆகாஷ் தெரிவித்தார். ரயில்வே காவலர்கள் உடனடியாக ஆம்புலன்ஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மீனா, மனிஷா இருவரும் கீழே தள்ளிவிடப்பட்ட இடத்துக்கு காவலர்கள் விரைந்தனர். ரயிலில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்டதால் இருவருக்கும் கடுமையான காயங்கள் இருந்தன. அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ஆகாஷிடம் நடந்த விவரங்களைக் கேட்டறிந்த காவலர்கள், தாய் மற்றும் மகள் இறந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக பேசிய ரயில்வே காவல்துறையினர், ``இந்த வழக்கை விசாரிக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள்'' என்றனர்.