திருப்பூர் மாநகர் எஸ்.வி.காலனியில் மின்வாரிய அலுவலகம் அருகே மருந்தகம் நடத்திவருபவர் விக்னேஷ். இவரின் மருந்தகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு வந்த இரண்டு இளைஞர்கள், தூக்க மாத்திரை கேட்டிருக்கின்றனர்.

மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மாத்திரை வழங்க முடியாது என்று விக்னேஷ் கூறவே, இளைஞர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது கடையில் இருந்த விக்னேஷின் தந்தை தண்டபாணி இளைஞர்கள் தகராறு செய்வதால் விக்னேஷை வீட்டுக்குச் செல்லும்படி கூறி அனுப்பிவைத்திருக்கிறார்.
அப்போது, அந்த இரண்டு இளைஞர்களும் தண்டபாணியை வழிமறித்துத் தாக்கினர். இது தொடர்பாக விக்னேஷ், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாருக்குத் தகவல் அளித்தார். அங்கு வந்த திருப்பூர் வடக்கு போலீஸார் இரண்டு இளைஞர்களையும் பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் திருப்பூர் ராம் நகரைச் சேர்ந்த மனோஜ்குமார் (27), கொங்கு பிரதான சாலைப் பகுதியைச் சேர்ந்த விபின்குமார் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது.

இவர்கள் தூக்க மாத்திரைக்கு அடிமையானதால், அதைக் கேட்டு மருந்தகத்தில் பிரச்னையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் வடக்கு போலீஸார் கைதுசெய்தனர். இது தொடர்பாக மருந்துக் கட்டுப்பாட்டு பிரிவு, மருந்தக ஆய்வாளர் மகாலட்சுமி தலைமையிலான குழுவினர், மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகள் தொடர்பாக திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.