உத்தரப்பிரதேச மாநிலம், லக்னோவின் சோன்பத்ரா மாவட்டத்திலுள்ள ராய்பூர் காவல் நிலைய பகுதியில், லட்டு பாண்டே, ஷியாம் சுந்தர் பாண்டே ஆகிய இரண்டு ஊடகவியலாளர்கள் நேற்றிரவு உணவகத்தில் தேநீர் அருந்திக்கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது 8:30 மணியளவில் அடையாளம் தெரியாத இருவர் மோட்டார் சைக்கிளில் வந்து இருவரையும் நோக்கி இரண்டு, மூன்று முறை துப்பாக்கியால் சுட்டிருக்கின்றனர். அதில் பலத்த காயமடைந்த இரண்டு ஊடகவியலாளர்களையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு உடனடியாக பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரிக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கும் ராய்பூர் காவல்துறையினர், ``அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் இரு ஊடகவியலாளர்களைக் கொலைசெய்ய முயன்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குற்றவாளிகள் வந்த வாகனம் குறித்து விசாரித்துவருகிறோம். விரைவில் குற்றவாளிகளைக் கைதுசெய்வோம். ஊடகவியலாளர்கள் கொடுக்கும் வாக்குமூலத்தை வைத்து அடுத்தகட்ட விசாரணை மேற்கொள்வோம்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.
காயமடைந்த ஊடகவியலாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் பனாரஸ் இந்து பல்கலைக்கழக மருத்துவமனை, ``காயம் ஆழமாக ஏற்பட்டிருந்தாலும், உயிருக்கு ஆபத்தில்லை. சிகிச்சை முடிந்து இருவரும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள்" எனத் தகவல் தெரிவித்திருக்கிறது.
