குமரி: சிறுமி மீது ஒருதலைக் காதல்; மனைவி கொலை - காதல் கடிதத்தால் சிக்கிய கணவர்!

காதல் கடிதம் எழுதி, தனது மகன் மூலம் 16 வயது சிறுமியிடம் கொடுத்திருக்கிறார். சிறுமி கடிதத்தைத் தன் தாயிடம் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் சிறுமி மீதான ஆசையால், தனது மனைவி மேகலாவை அடித்துக் கொன்றதாக பனிப்பிச்சை குறிப்பிட்டிருக்கிறார்.
கன்னியாகுமரி மாவட்டம், வெள்ளிச்சந்தை அருகே முட்டத்தைச் சேர்ந்தவர் பனிப்பிச்சை. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மேகலா (32) என்பவருக்கும் கடந்த 2012-ல் திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஐந்து வயது மகனும் மகளும் இருக்கிறார்கள். இந்தநிலையில் கடந்த மாதம் 17-ம் தேதி மேகலா திடீரென மர்மமான முறையில் வீட்டில் இறந்துகிடந்தார். மேகலா உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டதாக அவரது கணவர் பனிப்பிச்சை கூறினார். இதையடுத்து மேகலா உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆனால், மேகலா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவருடைய சகோதரர் அந்தோணி அடிமை வெள்ளிச்சந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து கல்குளம் தாசில்தார் ஜெகதா மற்றும் குளச்சல் ஏ.எஸ்.பி விஸ்வேஸ் பி.சாஸ்திரி முன்னிலையில் மேகலாவின் உடல் நேற்று மாலை தோண்டியேடுக்கப்பட்டு, அதே இடத்தில்வைத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது. ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர்.

இதையடுத்து மேகலாவின் கணவர் பனிப்பிச்சையை போலீஸார் கைதுசெய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மனைவியின் அக்காள் மகளை அடைவதற்காக பனிப்பிச்சை தனது மனைவியைக் கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. இது குறித்து போலீஸார் கூறுகையில், ``பனிப்பிச்சையின் மனைவி மேகலாவின் அக்காவுக்கு 16 வயதில் மகள் இருக்கிறார். அந்தச் சிறுமி மீது பனிப்பிச்சை ஒருதலையாக ஆசைப்பட்டிருக்கிறார்.
தான் ஆசைப்பட்ட வாழ்க்கை வாழ மனைவி இடையூறாக இருப்பதாகப் பனிப்பிச்சை கருதியிருக்கிறார். இதனால், மனைவியைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருக்கிறார். வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மனைவியை அடித்துக் கொலை செய்திருக்கிறார். பின்னர், அவர் உடல்நலக் குறைவால் இறந்ததாக நாடகம் ஆடியிருக்கிறார். மேகலாவின் 30-ம் நாள் நினைவு திருப்பலி முடியும் வரை பனிப்பிச்சை காத்திருந்திருக்கிறார்.

அதன் பிறகு பனிப்பிச்சை ஒரு காதல் கடிதம் எழுதி தனது மகன் மூலம் அந்த 16 வயது சிறுமியிடம் கொடுத்திருக்கிறார். அந்தச்சிறுமி கடிதத்தைத் தனது தாயிடம் கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தில் சிறுமியை அடைவதற்காக தனது மனைவி மேகலாவை அடித்துக் கொன்றதாக பனிப்பிச்சை குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம்தான் பனிப்பிச்சை மனைவியைக் கொலை செய்தது தெரியவந்தது. அதன் பிறகுதான் புகார் அளிக்கப்பட்டது. இப்போது பனிப்பிச்சையை கைதுசெய்திருக்கிறோம்" என்றனர்.