சென்னை சேலையூர், மதுரபாக்கம் கிராமத்தில் வனப்பகுதியில் ஆடு மேய்க்கச் சென்றவர்கள், அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடப்பதைக் கண்டனர். உடனடியாக அவர்கள் சேலையூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்குச் சென்ற போலீஸார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சடலமாகக் கிடந்த பெண், அணிந்திருந்த உடைகளைவைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த 8-ம் தேதி அகரம் தென் எம்.ஜி.ஆர் நகர், மகாலட்சுமி தெருவைச் சேர்ந்த ஏஞ்சல் என்பவர் தன்னுடைய அம்மா எஸ்தர் (51) என்பவரைக் காணவில்லை என்று புகாரளித்திருந்தார்.

இதையடுத்து ஏஞ்சலுக்கு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அதைக்கேட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறைக்குச் சென்ற ஏஞ்சல், சடலமாக கிடந்தது தன்னுடைய அம்மா எஸ்தர்தான் என உறுதிப்படுத்தினார். அதனால் எஸ்தர் எப்படி இறந்தார் என்று போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். இதற்கிடையில் எஸ்தரின் சடலத்தை பிரேத பரிசோதனைசெய்த மருத்துவர்கள் அவரின் தலையில் காயம் இருப்பதாகத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். அதனால் எஸ்தரை யாராவது கொலைசெய்தார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இது குறித்து போலீஸார் கூறுகையில், ``வனப்பகுதியில் சடலமாகக் கிடந்தது எஸ்தர் என்பது உறுதியாகியிருக்கிறது. அவர், பாலாஜி நகரில் உள்ள பெந்தேகோஸ்தே சபை சர்ச்சுக்கு கடந்த 26.5.2022-ம் தேதி விடியற்காலையில் வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றிருக்கிறார். அவர் வீட்டிலிருந்து புறப்பட்டபோது அவரின் மகள் ஏஞ்சல், அவரின் குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்திருக்கின்றனர். அதனால் எஸ்தர் எத்தனை மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார் என அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வுசெய்து வருகிறோம். அதில் ஒரு சிசிடிவி-யில் அதிகாலை ஐந்து மணியளவில் எஸ்தர் நடந்துச் செல்லும் காட்சி பதிவாகியிருக்கிறது.

அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராப் பதிவுகளை ஆய்வு செய்ததில் அந்த நேரத்தில் சென்ற வாகனங்களின் விவரங்களையும் சேகரித்து வருகிறோம். அதோடு எஸ்தரின் செல்போனுக்கு வந்த அழைப்புகள், அவரின் செல்போன் சிக்னல் ஆகியவற்றின் அடிப்படையிலும் விசாரணை நடந்துவருகிறது. இறந்துபோன எஸ்தர், மதபோதகராகவும் இருந்ததாகக் தகவல் கிடைத்திருக்கிறது."
சர்சுக்குச் சென்ற பெண், சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சேலையூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.