உத்தரப்பிரதேச மாநிலம் சம்பல் ரயில் நிலையத்தில் 32 வயது பெண், தனது 2 வயது மகனுடன் இரவில் ரயிலுக்காகக் காத்திருந்தார். அவர் ரயிலின் பொதுப்பெட்டியில் (முன்பதிவு இல்லாத பெட்டி) ஏற டிக்கெட் பெற்றிருந்தார். அந்த நேரம் அந்தப் பெண்ணுக்குத் தெரிந்த ராஜு சிங் என்ற டிக்கெட் பரிசோதகர் அங்கு வந்தார். அவர் அந்தப் பெண்ணிடம், `ஏன் தனியாக பொதுப்பெட்டியில் ஏறுகிறாய், அதில் அமர இடம்கூட கிடைக்காது. என்னுடன் வா, ஏ.சி ரயில் பெட்டியில் இடம் ஏற்பாடு செய்து தருகிறேன்” என்று கூறி ஏ.சி பெட்டிக்கு அழைத்துச் சென்றார். அவர்கள் லிங்க் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தனர்.

டிக்கெட் பரிசோதகர் அந்தப் பெண்ணுக்கு நான்கு ஆண்டுகளாக தெரியும். எனவே, அவர் அழைத்ததால் அவருடன் சென்றார். சிறிது நேரத்தில் டி.சி ராஜு சிங்கும் அவரின் மற்றொரு நண்பரும் அங்கு வந்து, தங்களிடமிருந்த தண்ணீரை அப்பெண்ணிடம் கொடுத்தனர். அந்தப் பெண்ணும் தண்ணீரைக் குடித்தார். ஆனால், அதைக் குடித்த சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது. உடனே, அந்தப் பெண்ணுடன் உறங்கிக்கொண்டிருந்த அவரது 2 வயது மகனை அடுத்த படுக்கைக்கு மாற்றிவிட்டு இரண்டு பேரும் சேர்ந்து அந்தப் பெண்ணைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தனர்.
அந்தப் பெண் அரை மயக்கத்தில் சத்தம் போட்டுக் கத்த முயன்றார். ஆனால், அவரால் முடியவில்லை. இருவரும் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பிச் சென்றுவிட்டனர். மறுநாள் காலையில் அந்தப் பெண் தான் செல்லவேண்டிய இடத்துக்குச் சென்றார். நடந்த சம்பவம் குறித்து யாரிடமும் கூறவில்லை. செல்லவேண்டிய இடத்துக்குச் சென்றுவிட்டு தனது சொந்த ஊருக்கு வந்தபோது நடந்த சம்பவம் குறித்து தன் கணவரிடம் அந்தப் பெண் தெரிவித்தார். உடனே அவர்கள் இது குறித்து ரயில்வே ஹெல்ப்லைன் மூலம் புகார் செய்தனர். பின்னர் ரயில்வே டிக்கெட் பரிசோதகருக்கு எதிராக எழுத்து மூலமும் புகார் செய்தனர்.

ரயில்வே போலீஸ் எஸ்.பி அபர்னா குப்தா உடனே பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் வாங்கினார். அதோடு இது குறித்து ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தார். அதன் அடிப்படையில் ரயில்வே போலீஸார், ராஜுசிங் வீட்டில் ரெய்டு நடத்தி அவரைக் கைதுசெய்தனர். அதோடு அவர் பணியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அவருடன் சேர்ந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது குறித்து விசாரித்துவருகின்றனர். ரயில்வே டிக்கெட் பரிசோதகரே ரயிலில் பயணம் செய்த பெண்ணைப் பாலியல் வன்கொடுமை செய்தது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.