திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகே உள்ள கோட்டூர் - நாலாம் சேத்தி ஐயம்பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவர், தனபால். இவருடைய மகள் தேவதர்ஷினி. 21 வயது நிரம்பிய தேவதர்ஷினி பி.ஏ பட்டப்படிப்பு முடித்திருக்கிறார். இந்நிலையில் தேவதர்ஷினிக்கும், கீழ்வேளூர் பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு கீழ்வேளூரில் உள்ள திருமண மண்டபத்தில் திருமணம் நடைபெறவிருந்தது. இரு வீட்டாரும் திருமண ஏற்பாடுகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில்தான் யாரும் எதிர்பாராத வகையில் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. மணப்பெண் தேவதர்ஷினி தனது வீட்டில் திருமணத்துக்கு ஒருநாள் முன்னதாக, காலை 7 மணியளவில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த, உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவதர்ஷினியை மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தேவதர்ஷினி ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த கோட்டூர் காவல்துறையினர், உயிரிழந்த தேவதர்ஷினியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இது குறித்து வழக்கு பதிவுசெய்த காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தேவதர்ஷினியின் தற்கொலைக்கான காரணம் குறித்து இதுவரை எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை.
