சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் சுரேஷ் (22). இவருக்கும் ஆவடியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு மாணவியை சுரேஷ் காதலித்ததாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவல் மாணவியின் குடும்பத்தினருக்குத் தெரிந்ததும், அவரை உறவினர் வீட்டில் தங்கவைத்தனர். இந்த நிலையில் உறவினர் வீட்டிலிருந்த மாணவி திடீரென மாயமானார். அதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், மகளைப் பல இடங்களில் தேடினர்.

பின்னர் மகள் மாயமான தகவலை ஆவடி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் போலீஸார் சிறுமி மாயம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் மாணவியை சுரேஷ் அழைத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து சுரேஷையும் மாணவியையும் போலீஸார் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். விசாரணையில் மாணவியிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறிய சுரேஷ், தன்னுடைய வீட்டுக்கு மாணவியை அழைத்துச் சென்றது தெரியவந்தது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
பின்னர் அவர், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். இதையடுத்து இந்த வழக்கு ஆவடி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. ஆவடி அனைத்து மகளிர் போலீஸார், மாணவிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டு தொடர்பாக மாணவி, சுரேஷ் ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தனர்.

அதன் பிறகு சுரேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். மாணவிக்கு போலீஸார் கவுன்சலிங் அளித்து பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.