2 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை! - பட்டுக்கோட்டை அதிர்ச்சி

துளசி தேவியும் அவரின் இரண்டு மகள்களும் கீழே படுத்திருந்தபடியே இறந்துகிடந்தனர். அவர்களுக்கு அருகிலேயே இரண்டு வளர்ப்பு நாய்களும் இறந்துகிடந்தன. சாந்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார்.
பட்டுக்கோட்டையில் வறுமையால் பெண் ஒருவர் தனது மகள், இரண்டு பேத்திகள் மற்றும் இரண்டு வளர்ப்பு நாய்களுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பட்டுக்கோட்டை அருகேயுள்ள வளவன்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (48). இவருக்குச் சொந்தமான மாடிவீட்டின் மேற்பகுதியில் சாந்தி (50) என்பவர் எட்டு மாதங்களுக்கு முன்னர் வாடகைக்குக் குடிவந்திருக்கிறார். இவருடைய கணவர் இறந்துவிட்டார். சாந்தி, மகள் துளசிதேவி (23), அவரின் இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தையான சாரல் (2), எட்டு மாதங்களே ஆன ஒரு பெண் குழந்தை ஆகியோருடன் வசித்துவந்திருக்கிறார். பொமேரியன் உள்ளிட்ட இரண்டு வளர்ப்பு நாய்களையும் வளர்த்துவந்திருக்கிறார்.
எப்போதும் குழந்தைகள் மற்றும் நாய் குரைக்கும் சத்தம் சாந்தியின் வீட்டில் கேட்டுக்கொண்டேயிருக்கும். இந்நிலையில், நேற்று மதியத்துக்கு மேல் அவர்கள் வீட்டிலிருந்து எந்தச் சத்தமும் இல்லை. வீட்டுக்குள்ளிருந்து சாந்தியோ, அவர் மகள் துளசிதேவியோ யாரும் வெளியே வரவேயில்லை. இரவானதற்குப் பிறகும் குழந்தை கத்துவது உட்பட எந்தச் சத்தமும் இல்லாமல் இருந்ததைத் தொடர்ந்து, வீட்டின் உரிமையாளருக்குச் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

உடனே அவர் போலீஸுக்குத் தகவல் கொடுத்திருக்கிறார். சம்பவ இடத்துக்கு போலீஸார் வந்து பார்த்தபோது, கதவு உள்ளே பூட்டப்பட்டிருந்தது. பின்னர் வீட்டின் கதவை உடைத்துச் சென்ரிருக்கிறார்கள். அப்போது துளசிதேவியும், அவரின் இரண்டு மகள்களும் கீழே படுத்திருந்த நிலையில் இறந்துகிடந்தனர். அவர்களுக்கு அருகிலேயே இரண்டு வளர்ப்பு நாய்களும் இறந்துகிடந்தன.
சாந்தி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருந்தார். நான்கு பேர் மற்றும் இரண்டு நாய்கள் இறந்த தகவல் அந்தப் பகுதியில் பரவி பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. குழந்தைகள் இறந்துகிடப்பதைப் பார்த்து விசாரணைக்குச் சென்ற போலீஸாரே கண்கலங்கியிருக்கின்றனர்.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம். ``சாந்தியின் கணவர் இறந்துவிட்டநிலையில் மகள் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வசித்துவந்திருக்கிறார். சாந்தியின் மகள் காதல் கல்யாணம் செய்துகொண்டவர் எனத் தெரிகிறது. இதை சாந்தி, தன் உறவினர்களுக்குத் தெரியப்படுத்தவில்லை. இதனால் உறவினர்கள் யாரும் சாந்தியின் வீட்டுக்கு வருவதில்லை. தொடர்பிலும் இல்லை எனக் கூறப்படுகிறது.
சாந்தி, துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்துவந்திருக்கிறார். அதில் வரும் வருமானத்தைவைத்துத்தான் குடும்பம் நடந்திருக்கிறது. கொரோனா லாக்டெளனால் முழுச் சம்பளம் வரவில்லை எனத் தெரிகிறது. சின்னக் குழந்தைகள் இருப்பதால், பால் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளுக்கே மாதம் ஒரு தொகை தேவைப்பட்டிருக்கிறது. அத்துடன் வீட்டு வாடகையும் சேர்ந்துகொண்டிருக்கிறது.
இதனால், வறுமையின் சூழ்நிலையிலேயே குடும்பம் இருந்திருப்பதாகத் தெரிகிறது. இதைத் தொடர்ந்து முதலில் சாப்பாட்டில் விஷம் கலந்து தனது மகள் மற்றும் பேத்திகள், அத்துடன் இரண்டு நாய்களுக்கும் கொடுத்துச் சாப்பிடவைத்து கொன்றுவிட்டு, சாந்தி தானும் தூக்கு மாட்டித் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் எனக் கருதுகிறோம். அதன்பேரில் விசாரணை நடத்திவருகிறோம்'' என்றனர்.
அப்பகுதியில் இது குறித்து விசாரித்தோம். ``சாந்தி, அவரது மகள் துளசி தேவி மற்றும் பேரக் குழந்தைகள்மீது உயிரையையே வைத்திருந்தார். துளசி தேவியின் கணவரைப் பற்றிய விவரம் தெரியவில்லை. அவர் இங்கு வந்ததும் இல்லை. துளசி தேவி, காதல் கல்யாணம் செய்துகொண்டதால் சாந்தியின் உறவினர்கள் இவர்களை ஒதுக்கிவைத்திருக்கிறார்கள். அதனாலேயே இங்கு வந்து அவர்கள் குடியேறினார்களா என்பதும் தெரியவில்லை.

மன்னார்குடியில் சாந்தியின் அக்கா மற்றும் அவரின் சகோதரர் நல்லநிலையில் இருப்பதாக, தற்போது தெரியவந்திருக்கிறது. சாந்தி வேலைக்குப் போய்விட்டு வந்ததுமே இரண்டு நாய்களும் ஓடி வந்து அவர் மீது பாசத்துடன் தாவும். அந்த அளவுக்குப் பாசமாக வளர்த்தார். கொஞ்ச நாள்களாகவே இந்தக் குடும்பம் சிரமத்தில் இருந்ததற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், விஷம் கலந்து கொன்றுவிட்டு, தற்கொலை செய்துகொள்வதற்கான தைரியம் அவருக்கு எப்படி வந்தது என்பது தெரியவில்லை.
அப்படியே தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தாலும், நாய்க்கும் விஷம் கலந்து கொடுத்துக் கொல்ல முடிவு செய்தது ஏன் என்பது புரியவில்லை. வெறும் தற்கொலை வழக்காக முடிவு செய்து போலீஸார் இதை முடித்துவிடாமல் முழுமையான விசாரணை நடத்தி, உண்மைநிலை என்னவென்பதை வெளியே கொண்டு வர வேண்டும்’’ என்றனர்.