சேலத்தில் உயர்மின் அழுத்தக் கோபுரம் அமைப்பதற்காக ஏழை விவசாயியின் காட்டில் இருந்த மரங்களை வெட்டியதால் மன உளைச்சலில் அந்த விவசாயி தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவருடைய உடல் சேலம் அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், இறந்தவரின் மரணத்துக்கு பவர் கிரிட் நிறுவனமும், தமிழக அரசும் பொறுப்பேற்க வேண்டும். அதுவரை பிரேதப் பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று விவசாய அமைப்பைச் சேர்ந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் குவிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியமும் இணைந்து சத்தீஸ்கர் மாநிலம் ரெய்ச்சூரிலிருந்து திருப்பூர் மாவட்டம் புகழூர் வரை 800 கிலோவாட் உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் திட்டத்தை விளைநிலங்கள் வழியாகச் செயல்படுத்தி வருகிறது. இந்தத் திட்டத்துக்காக சேலம் மாவட்டம் நங்கவள்ளி பள்ளக்கானூரைச் சேர்ந்த பெருமாளுக்குச் சொந்தமான காட்டில் இருந்த 20 ஆண்டுகள் பழைமைவாய்ந்த மரங்களை வெட்டியதால் மனமுடைந்து விவசாயி பெருமாள் மருந்து குடித்து மரணமடைந்துள்ளார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இதுபற்றி பெருமாளின் மூத்த மகன் சக்திவேல் கூறும்போது, ``எங்க அம்மா பேரு அன்னக்கிளி, அப்பா பேரு பெருமாள். எங்க பெற்றோருக்கு 3 பசங்க, ஒரு பொண்ணு. நாங்க ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு 2 1/2 ஏக்கர் காடு இருக்கிறது. அதில் அப்பா 20 ஆண்டுகளுக்கு முன்பு புளியமரம், வேப்பமரம், தென்னை மரம் எனப் பல்வகையான மரங்களை வைத்து வளர்த்து வந்தார்.

இந்த நிலத்தில் பாடுபட்டு எங்கள் நாலு பேரையும் படிக்க வைத்து ஆளாக்கினார். இந்த நிலையில், கடந்த 13-ம் தேதி எங்க காட்டில் இருந்த மரங்களை வெட்டுவதற்காக பவர் கிரிட் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களும் வருவாய்த் துறை அதிகாரிகளும் வந்தார்கள். இழப்பீடு கொடுக்காமல் மரத்தை வெட்டினால் தற்கொலை செய்து இறந்துவிடுவதாக அப்பா தெரிவித்தார். ``செத்தா செத்துட்டு போடா... தடுத்தால் காவல்துறை மூலம் பிடித்து சிறையில் அடைத்து விடுவோம்'' என்று மிரட்டினார்கள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
மரம் வெட்டியதால் மனமுடைந்த அப்பா 14-ம் தேதி காலை 8:30 மணிக்கு மருந்து குடித்துவிட்டு மரத்தடியில் வாயில் நுரைதள்ளிக் கிடந்தார். அவரைத் தூக்கி வந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை பலனின்றி நேற்று மரணமடைந்தார். எங்க அப்பாவின் மரணத்துக்குத் தமிழக அரசும், பவர் கிரிட் நிறுவனமுமே காரணம்'' என்றார்.

இதுபற்றி உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் ஈசன், ``விவசாயி பெருமாளின் மரணத்துக்கு பவர் கிரிட் நிறுவனம்தான் காரணம் என்று முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்து அவர்களைக் கைது செய்ய வேண்டும். இத்திட்டத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி உறுதி கொடுக்கும் பட்சத்தில் மட்டுமே உடலை வாங்குவோம். இல்லையென்றால் விவசாய சங்கங்கள் கலந்து ஆலோசனை செய்து அடுத்தகட்ட போராட்டத்தை அறிவிப்போம்'' என்றார்.
இதுகுறித்து மத்திய அரசின் பவர் கிரிட் துணை மேலாளர் குமாரை தொடர்புகொண்டு பேசினோம், ``அப்படி யாரையும் நாங்கள் மிரட்டவில்லை. இப்போது முக்கியமான பணியில் இருக்கிறேன். இதுதொடர்பாக பிறகு விரிவாகப் பேசுகிறேன்" என்று தொடர்பை துண்டித்துவிட்டார்.