Cyclone Mandous Live: சென்னையில் மின்சாரம் தாக்கி 2 பேர் பலி; 350 மரங்கள் விழுந்துள்ளன - மரங்களை அகற்றும் பணி தீவிரம்!

கரையைக் கடந்தது மாண்டஸ் புயல்..!
மாண்டஸ் புயல்: புழுதிவாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்த மரம் வேரோடு சாய்ந்தது!
மாண்டஸ் புயல் காரணமாக சென்னையில் சுமார் 60 இடங்களில் மரங்கள் சாய்ந்திருப்பதாகத் தீயணைப்புத்துறையினர் தெரிவித்திருக்கிறார்கள். மேலும், மொத்தமாக 300 முதல் 350 மரங்கள் வரை முறிந்திருக்கின்றன என மாநகராட்சி ஆணையர் தெரிவித்தார். அதை அப்புறப்படுத்தும் பணியை மாநகராட்சி ஊழியர்கள் மேற்கொண்டுவருகிறார்கள்.
சென்னை மடிப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி இருவர் பலி... குடிசை வீட்டில் இருந்ததால், புயலில் பாதுகாப்பாக இருக்க அருகில் இருந்த வீட்டின் கார் பார்க்கிங்கில் தூங்கச் சென்றபோது, அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியை மிதித்ததால் இருவர் பலி. காஞ்சிபுரம் மாவட்டத்திலும் மின்சாரம் தாக்கி இருவர் பலியாகியுள்ளனர். இதனால் மாண்டஸ் புயல் காரணமாக மின்சாரம் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 4-ஆக அதிகரித்திருக்கிறது.
கரையைக் கடந்தது மாண்டஸ்!
நேற்றூ நள்ளிரவு சென்னை மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கிய மாண்டஸ் புயல், முழுவதுமாகக் கரையைக் கடந்துவிட்டதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன், `மாண்டஸ் புயல் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும். மேலும், இன்று பகலில் காற்றழுத்தத் தாழ்வுமண்டலமாக மாறும். மேலும் உள் மாவட்டங்களில் மழை தொடரும்’ எனத் தெரிவித்திருந்தார்.

மாண்டஸ் புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டம், காட்டுப்பாக்கத்தில் அதிகபட்சமாக 142 மில்லிமீட்டர் மழை பதிவாகியிருக்கிறது.சென்னை நுங்கம்பாக்கத்தில் 106 மில்லிமீட்டர் மழையும், மீனம்பாக்கத்தில் 103 மில்லிமீட்டரும், மாதவரத்தில் 87 மில்லிமீட்டரும், திருவள்ளூரில் 83 மில்லிமீட்டர் மழையும் பதிவானதாக பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னைக்கு தெற்கே 40 கி.மீ தொலைவில் மாண்டஸ்; இரண்டுமணி நேரத்தில் கரையைக் கடக்கும் எனத் தகவல்!

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்துக்கு மிக அருகில் மையம்கொண்டிருக்கிறது. அதாவது, சென்னைக்குத் தெற்கே 40 கி.மீ தொலைவில் புயல் இருக்கிறது. இந்தப் புயல், இன்னும் இரண்டு மணி நேரத்தில் முழுமையாக கரையைக் கடந்துவிடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருக்கிறது.
14 கி.மீ வேகத்தில் கரையைக் கடந்து கொண்டிருக்கிறது மாண்டஸ்!
மாண்டஸ் புயல் மணிக்கு 14 கி.மீ வேகத்தில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்துகொண்டிருக்கிறது.
கரையைக் கடக்கத் தொடங்கியது மாண்டஸ் புயல்! - மணிக்கு 60 முதல் 70 கி.மீ வேகத்துக்கு வீசுகிறது காற்று

மாண்டஸ் புயல் மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்கத் தொடங்கியிருக்கிறது. இதன் காரணமாக 60 முதல் 70 கி.மீ வேகத்துக்கு காற்று வீசிவருகிறது.
மிரட்டும் மாண்டஸ்... அவசர உதவி எண்களை அறிவித்த சென்னை மாநகராட்சி!

மாண்டஸ் புயல் சென்னையில் கோரத் தாண்டவம் ஆடிக்கொண்டிருக்கிறது. பல இடங்களில் கனமழை பெய்துவரும் சூழலில், புயல் மற்றும் மழையின்போது பொதுமக்களின் அவசரத் தேவைகளுக்காகவும், புகார்களைத் தெரிவிக்கவும் சென்னை மாநகராட்சி, உதவி எண்களை அறிவித்திருக்கிறது.
அதன்படி, மக்கள் 1913 என்ற எண்ணிலும், 044 2561 9206, 044 2561 9207, 044 2561 9208 ஆகிய தொலைபேசி எண்களிலும்... 9445477206 என்ற வாட்ஸ்அப் எண்ணிலும் தொடர்புகொண்டு தங்களுக்குத் தேவைப்படும் உதவிகள் குறித்தும், புகார்கள் குறித்தும் தகவல் தெரிவிக்கலாம்
பேருந்துகள் தடுத்து நிறுத்தம்!
விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் செல்லும் அனைத்து வாகனங்களும், விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டன. புயல் கரையைக் கடக்கும்வரை, கிழக்கு கடற்கரை சாலையில் செல்வதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
14 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
நீலகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, கடலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர், நீலகிரி, செங்கல்பட்டு, தருமபுரி, வேலூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட 14 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.
`மாண்டஸ் புயலின் தற்போதைய நிலை இதுதான்!' - வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்

சற்று முன்பு வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் நிருபர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``மாண்டஸ் புயல் தற்போது மாமல்லபுரத்திலிருந்து தென்கிழக்கே 135 கி.மீ மற்றும் தெற்கே சுமார் 170 கி.மீ தொலைவில் சென்னையின் தென்கிழக்கே நிலைகொண்டிருக்கிறது. கடந்த மூன்று மணி நேரத்தில் 14 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்திருக்கிறது. காற்றின் வேகம் சுமார் 70-ல் இருந்து 80 கிலோமீட்டர் வேகத்தில் இருக்கிறது. சென்னை-புதுவை இடையே 1891 முதல் 2022 வரை 121 ஆண்டுகளில் 12 புயல்கள் கடந்திருக்கின்றன. மாண்டஸ் புயல் கடந்தால் 13-வது புயலாகும். அதிகபட்சமாக 5 செ.மீ மழை கொடைக்கானலில் பதிவாகியிருக்கிறது. கடலோரங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
புகைப்படம் எடுக்கவோ, வேறு எதற்காகவோ வெளியில் செல்லக் கூடாது. இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் மாமல்லபுரத்துக்கு அருகில் புயல் கரையைக் கடக்கும்" என்றார்.
அவசரகாலச் செயல்பாடு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!

வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு சமயத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், சென்னை எழிலகத்திலுள்ள மாநில அவசரகாலச் செயல்பாடு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்துவருகிறார். அவருடன் அமைச்சர்கள் பொன்முடி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோர் இருந்தனர்.
மாண்டஸ் புயல்: மெரினாவிலிருந்து IPS Team நேரலை!
ஆக்ரோஷ அலைகள்... சீறும் 'மாண்டஸ்' புயல்... அச்சத்தில் மீனவ மக்கள் - கொட்டிவாக்கம் குப்பத்திலிருந்து நேரலை!
மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ்!

மாண்டஸ் புயல் மாமல்லபுரத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது. அதன் காரணமாக சென்னை உட்பட பல மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இந்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உட்பட எட்டு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
புயலாக வலுவிழந்த மாண்டஸ்..!
விழுப்புரம் மாவட்டம், பிள்ளைச்சாவடி மீனவ கிராமத்தில், மாண்டஸ் புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக வீடுகள் உட்பட ஐந்து கட்டடங்கள் கடலில் அடித்துச்செல்லப்பட்டன.
மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை சேதம்
சென்னை மெரினாவில் சமீபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட பாதை கடல் சீற்றத்தால் சேதமடைந்திருக்கிறது.
மாண்டஸ் புயல்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!
இடம்: மரக்காணம்
- அ.கண்ணதாசன் / வீடியோ: தே.சிலம்பரசன்
புதுச்சேரி: கடல்நீர் உட்புகுவதால் பாதிக்கப்பட்டிருக்கும் புதுச்சேரி பிள்ளைச்சாவடி மீனவ கிராம மக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் மறியல்.

நெருங்கும் மாண்டஸ்..!
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. தற்போது தீவிரப் புயலாக சென்னையிலிருந்து 270 கி.மீ தொலைவில் இருக்கும் மாண்டஸ், இன்னும் மூன்று மணி நேரத்தில் புயலாக வலு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. மேலும் மாண்டஸ் புயல் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாகவும், அப்போது அதிகபட்சமாக மணிக்கு 85 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நாகை, புதுச்சேரி, சென்னை மாமல்லபுரம், காசிமேடு உள்ளிட்ட பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. மேலும், மாண்டஸ் புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. சென்னை செம்பரம்பாக்கம், புழல் ஏரிகளில் இன்று மதியம் 12 மணிக்கு முதற்கட்டமாக 100 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்படவிருக்கிறது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளது.
`85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும்!’
வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் காரணமாக புதுச்சேரி, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மழை பெய்துவருகிறது. நேற்று மாலை முதல் படிப்படியாக காற்றின் வேகமும் அதிகரித்துவருகிறது. இந்த நிலையில் மாண்டஸ் புயல், இன்று காலை நிலவரப்படி, சென்னையிலிருந்து 320 கிலோமீட்டர் தொலைவிலும், காரைக்காலிலிருந்து 240 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருக்கிறது.

மாண்டஸ் புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டிருக்கும் நிலையில், கரையைக் கடக்கும்போது அதிகபட்சமாக 85 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தலைமைச் செயலாளர் உத்தரவு..!
இந்திய வானிலை ஆய்வு மையம் தனது அறிக்கையில், ``நேற்று (07.12.2022) தென் மேற்கு வங்கக்கடல் மற்றும் தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், `மாண்டஸ்’ புயலாக வலுவடைந்து தென்கிழக்கு சென்னையிலிருந்து சுமார் 550 கி.மீ தொலைவில் நிலைகொண்டிருக்கிறது’’ என்றும், ``இது மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புதுச்சேரி - ஸ்ரீஹரி கோட்டவுக்கு இடையே 09.12.2022 அன்று நள்ளிரவு கரையைக் கடக்கக்கூடும்’’ என்றும் தெரிவித்திருந்தது.
இதன் காரணமாக 08-12-2022 முதல் 11-12-2022 முடிய நான்கு நாட்களுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என்றும், கடலோரப் பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வரை பலத்த காற்று மற்றும் தரைக்காற்று வீசக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் தலைமைச் செயலாளர், புயல் மற்றும் கனமழையை எதிர்கொள்ள மேற்கொள்ளப்பட்டிருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு துறைகளின் தயார்நிலை குறித்து துறை உயர் அலுவலர்களுடன் விரிவாக ஆலோசனை மேற்கொண்டு சில உத்தரவுகளை வழங்கினார்.
அதன்படி, தேசியப் பேரிடர் மீட்புப் படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 396 வீரர்கள் அடங்கிய 12 குழுக்கள் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், மயிலாடுதுறை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களுக்கு விரைந்துள்ளன.
கடலோரப் பகுதிகளில் அமைக்கப்பட்டிருக்கும் 424 முன்னெச்சரிக்கை அமைப்புகள் மூலம், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தொடர்ந்து புயல் குறித்த அறிவிப்புகளை வழங்க வேண்டும்.
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் புயல் சின்னத்தைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொதுவான எச்சரிக்கை நடைமுறை (Common Alert Protocol) மூலம் குறுஞ்செய்திகள் வாயிலாக எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கும் நிலையில் இதைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.
முன்னெச்சரிக்கைச் செய்திகள் TNSMART செயலி மூலமாகவும், சமூக ஊடகங்கள் மூலமாகவும் தொடர்ந்து வழங்கப்பட வேண்டும்.
பேரிடரின்போது காவல்துறை மூலமாக போக்குவரத்தைச் சீரமைக்க போதுமான காவலர்களை ஈடுபடுத்த வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகக்கூடிய இடங்களில் முன்கூட்டியே தேவையான படகுகள், உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
பலத்த காற்று காரணமாக விழும் மரங்களை உடனடியாக அகற்ற மர அறுப்பான்கள் மற்றும் இதர உபகரணங்களுடன் நடமாடும் குழுக்கள் அமைப்பதோடு, போதுமான அளவு உபகரணங்களை வைத்திருக்க வேண்டும்.
பாதிப்புக்குள்ளாகும் / தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை முன்கூட்டியே மீட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்குத் தேவையான உணவு, பாதுகாப்பான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும்.
பொதுமக்கள் கடற்கரைக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பலத்த காற்று வீசும்போது மரங்களின் கீழ் நிற்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நீர்நிலைகளின் அருகிலும், பலத்த காற்று வீசும்போது திறந்தவெளியிலும் தன்படம் எடுப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாண்டஸ் புயல் அப்டேட்!
நெருங்கும் புயல் சீற்றத்துடன் காணப்பட்ட புதுச்சேரி கடல்
வங்கக்கடலில் உருவாகியிருக்கும் மாண்டஸ் புயல் நாளை நள்ளிரவு சமயத்தில் புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே கரையைக் கடக்க வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நேற்று இரவு 11:30 மணியளவில் 'மாண்டஸ்' புயலாக வலுப்பெற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டிருந்தது. இன்று (08.12.2022) காலை 8:30 மணி நிலவரப்படி, காரைக்காலுக்குக் கிழக்கு-தென்கிழக்கே 460 கி.மீ தொலைவிலும், சென்னைக்கு 550 கி.மீ தென்கிழக்கேயும் நிலைகொண்டிருக்கிறது.
இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, வட தமிழகம்-புதுவை-தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே 9-ம் தேதி நள்ளிரவில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருக்கிறது. இன்று, தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை (09.12.2022), தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிப் பகுதிகளில் ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும். சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் இடையிடையே 70 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தற்போதைய நிலவரப்படி மாண்டஸ் புயலின் வேகம் மணிக்கு 6 கி.மீ வேகத்திலிருந்து 12 கி.மீ-ஆக அதிகரித்திருக்கிறது. புயலின் காரணமாக காற்றின் வேகம் படிப்படியாக அதிகரிக்கக்கூடும். மேலும், வட தமிழகக் கடற்கரைப் பகுதிகளில் 75 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீச வாய்ப்பிருக்கிறது. நாளை நள்ளிரவு வாக்கில், புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டா இடையே மாமல்லபுரம் அருகே புயல் கரையைக் கடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை காலை வரை தீவிரப் புயலாக நகரும் மாண்டஸ் புயல், பின் சற்று வலுக்குறைந்து கரையைக் கடக்க வாய்ப்பிருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.