`16,637 பேர்; இளம் வாக்காளர் சேர்க்கையில் தமிழகத்தில் முதலிடம்!’- கரூர் ஆட்சியர் தகவல்

`18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 நபர்கள் இடம்பெறுகின்றனர். இதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில், கரூர் மாவட்டம்தான் தமிழக அளவில் முதலிடம் பெற்றுள்ளது.’- ஆட்சியர்.
``தமிழக அளவில், புதிய வாக்காளர் சேர்க்கையில் கரூர் மாவட்டம் முதலிடத்துக்கு வந்திருக்கிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 பேர் இடம்பெறுகின்றனர். இதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில் கரூர் மாவட்டம் முதலிடம் பெற்றிருக்கிறது" என்று கரூர் மாவட்ட ஆட்சியர் மலர்விழி குறிப்பிட்டிருக்கிறார்.

கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், குளித்தலை ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. தமிழகத்தில் 2021-ம் ஆண்டுக்கான புகைப்படத்துடன்கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித்தலைவருமான மலர்விழி அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் முன் வெளியிட்டார். அதன்படி, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,01,902 பேரும், பெண் வாக்காளர்கள் 1,11,201 பேரும், இதர வாக்காளர்கள் 7 பேரும் என மொத்தம் 2,13,110 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். கரூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 115834 பேரும், பெண் வாக்காளர்கள் 1,28,321 பேரும், இதர வாக்காளர்கள் 19 பேரும் என மொத்தம் 2,44,174 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர்.

அதேபோல், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,03,736 பேரும்ம், பெண் வாக்காளர்கள் 1,08,865 பேரும்ம், இதர வாக்காளர்கள் 43 பேரும் என மொத்தம் 2,12,644 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். குளித்தலை சட்டமன்றத் தொகுதியில், ஆண் வாக்காளர்கள் 1,10,462 பேரும், பெண் வாக்காளர்கள் 1,16,312 பேரும், இதர வாக்காளர்கள் 11 பேரும் என மொத்தம் 2,26,785 வாக்காளர்கள் இடம்பெறுகின்றனர். ஆகமொத்தம், கரூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்களின் எண்ணிக்கை 4,31,934, பெண் வாக்காளர்கள் 4,64,699, இதர வாக்காளர்கள் 80 பேர் இடம்பெற்றுள்ளனர்.
பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்டத் தேர்தல் அலுவலரும், கரூர் மாவட்ட ஆட்சியருமான மலர்விழி, ``கரூர் மாவட்டத்தில் வரும் 2021-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் 8,96,713 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதியுடையவர்கள். புதிதாக 17,631 நபர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் 16,637 பேர் இடம்பெறுகின்றனர்.

இதன் மூலம் மாநில அளவில் 18 வயது பூர்த்தி அடைந்த புதிய வாக்காளர்கள் சேர்க்கையில், கரூர் மாவட்டம்தான் தமிழக அளவில் முதலிடம் பெற்றிருக்கிறது" எனத் தெரிவித்தார்.