மலையேற்றப் பயணத்தின்போது கிடைக்கும் இன்பம் வேறு எங்கும் கிடைக்காது என்றே சொல்லலாம். அப்படிப்பட்ட தருணத்தில் பறவை நோக்குதலும் இணைந்துவிடுகிறது. காடுகளுக்குள் சென்ற எங்களுக்கு, சுறுசுறுப்பாக இருக்கும் சின்ன தேன்சிட்டும் (crimson –backed sunbird), செம்மீசை சின்னான்னும் (red whiskered bulbul), காட்டு மைனாவும் (jungle myna) தான் புது உற்சாகத்தையும் வரவேற்பையும் தந்தன. அடிக்கடி கேட்கும் சீகார் பூங்குருவி (Malabar whistling thrush) பச்சை குக்குறுவான் (brown headed barbet) ஆகிய இரண்டும் எங்களை காட்டினுள் இயல்பாக இழுத்துச் சென்றுவிட்டது. மலையேற்ற நிகழ்வில் கவனிக்க வேண்டிய விஷயங்களில் காட்டு மாடு. பழனி மலைத்தொடர் தாண்டிக்குடியில் அவை அதிகம் வாழ்வதாக கேள்விப்பட்டிருக்கிறேன்.

பயணத்தை அப்படியே தொடர்ந்தோம். பெரிய வளர்ந்த மரத்தில் காதல் ஜோடிகளான பெரிய பொன்முதுகு மரங்கொத்திகள் (greater flamback) தன் வாழ்விடத்தினைச் சரிசெய்துகொண்டு விளையாடி மகிழ்ந்துகொண்டிருந்தன. அதைப் பார்த்த நாங்கள் ஒரு கணம் நின்று ரசித்தோம். `ஒருவேளை புகைப்படக்கருவியில் படம் எடுத்திருக்கலாம். ஆனால், முதலில் ஒரு பறவை அல்லது பட்டாம்பூச்சியினைப் பார்த்தால் ரசிக்க வேண்டும்' என்று பறவையில் ஆர்வலர் இரவீந்திரன் அவர்கள் அடிக்கடி சொல்வதை கேட்டிருக்கிறேன். அவர் சொல்வதும் உண்மையே; எடுத்தவுடன் புகைப்படக்கருவியில் படம் எடுத்தால் பறவைகளுக்கு தொந்தரவு செய்வதாக ஆகிவிடும்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALSசில மணித்துளிகள் காத்திருப்பிற்குப் பின் படம் எடுத்தால் சிறப்பாக இருக்கும். மரங்கொத்தியைப் பார்த்த பின், எங்களின் காட்டு நடைப்பயணமும் ஆரம்பித்தது. மறுபடியும் குரல் கேட்டுக்கொண்டே இருந்தது. இந்த முறை அது (Malabar whistling thrush) அல்ல. இது வேறுவிதமாக 'வ்வா வ்வா' எனச் சிரிப்பதுபோல் இடைவிடாத குரலாக இருந்தது. யாரோ சிரிப்பது போல் உள்ளதே என்று என் கண்கள் தேட ஆரம்பித்தன.

அதற்கிடையில் வெள்ளைக் கண்ணிகளின் (white eye) விளையாட்டு, காட்டு மைனாவின் (jungle myna) இடைவிடாத குரலோசை ஆகியவை என் கவனத்தைச் சிதறச்செய்தன. அதை மீறி அந்தச் சிரிப்புச் சத்தம் அதிகமாக என் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. பொறுமை தாங்கமுடியாமல் உடன் வந்தவரிடம் கேட்டுவிட்டேன். அவர் கூறிய பதில் என்னைக் கொஞ்சம் வியப்பில் ஆழ்த்தியது. அந்தச் சிரிப்பிற்குச் சொந்தக்காரர் மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar grey hornbill) என்றும் கிட்டத்தட்ட மூன்று அல்லது நான்கு பறவைகள் இருக்கலாம் என்றும் கூறினார். "உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால் இன்று அதைப் பார்க்கலாம்" என்றார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
அவர் கூறியபடியே அந்தக் குரல்வந்த திசைநோக்கி காட்டுப்பயணம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தது. எனக்கும் என்னுடன் வந்தவர்களுக்கு அங்கு ஆச்சர்யம் காத்திருந்தது. மலபார் சாம்பல் இருவாச்சி (Malabar grey hornbill) தன் இணையுடன் மரத்தில் அமைந்திருப்பதைக் கண்டுவிட்டோம். காதலுக்கே உதாரணம் என்று இருவாச்சி பறவைகளைத்தான் குறிப்பிடுவார்கள். இந்தியாவில் மட்டும் 6 வகையான இருவாச்சிகள் உள்ளன. அதிலும் 4 வகைகள் மேற்குத் தொடர்ச்சிமலைகளில் வாழ்கின்றன. அடர்ந்த காடுகளில் அத்தி, ஆல் மரங்களில் உள்ள பொந்துகளில் இவை வசிக்கின்றன. பழுப்பு தேய்ந்த கருஞ்சாம்பல் நிறம் கொண்ட உடலமைப்பும், அரஞ்சு நிற அலகுமாக இவை காணப்படும். மற்ற இருவாச்சி பறவைகள் போல் இவற்றின் அலகின் மீது தொப்பி போன்ற அமைப்பு இருக்காது.

தலையின் பக்கங்களிலும், கழுத்திலும், தொண்டையிலும் சாம்பல் தோய்த்த வெண்ணிறக் கோடுகள் காணப்படுகின்றன. வாலானது செம்பழுப்பு நிறமாகக் காட்சியளிக்கும். பெண் பறவையின் அலகு வெளிர் மஞ்சள் நிறமாக இருந்தது. மழை மிகுந்த பசுமை மாறாக் காடுகளை கொண்ட நீலகிரி, கொடைக்கானல் மலைத்தொடர்களிலும் 1600 மீட்டர் கொண்ட சமவெளிப் பகுதிகளிலும் குறைவான எண்ணிக்கையில் வாழ்கின்றன. மற்ற இருவாச்சிகள் போலவே தன் இணையுடன் சேர்ந்து சுற்றும் பழக்கம் கொண்டவை. உயரமான மரப்பொந்துகளில் கூடமைத்து பெண் பறவை உள்ளே இருக்கும். பெண்ணுக்கு இரை கொண்டுவரும் ஆண், சுவரின் வாயிலைத் தட்டி ஒலி உண்டாக்குகிறது. பின் கொண்டுவந்த பழங்களை தன் அலகின் மூலம் பெண் பறவைக்குக் கொடுக்கிறது. இவற்றின் வாழ்வியலே மிக அழகானது.
20 நிமிடங்கள் தரிசனத்தை வழங்கிய மலபார் சாம்பல் இருவாச்சி மீண்டும் அந்தச் சிரிப்புடன் பறந்து சென்றது. இத்தகைய அரிய காட்சியை புகைப்படக்கருவியில் பதிவு செய்துவிட்டு நாங்களும் புறப்பட்டோம்.