முதுமலை சரணாலயத்தின் ஆண்டு மதிப்பு ₹14,650 கோடி... முதல்முறையாக நடந்த சூழலியல் மதிப்பீடு!

பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த முதுமலை புலிகள் காப்பக வனங்கள் அளிக்கும் சுற்றுச்சூழல் சேவைகளின் மொத்த மதிப்பு ஆண்டுக்கு ரூ.14,650 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது
முதுமலை புலிகள் காப்பகம் சூழலியலுக்கு நல்கும் கொடைகள் குறித்து முதல் முறையாகக் கணக்கெடுக்கப்பட்டதில், இவற்றின் ஆண்டு மதிப்பு ரூ.14,650 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. மூன்று மாநில எல்லையோரத்தில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம், 688 சதுர கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது.
வங்கப்புலிகள் மற்றும் ஆசிய யானைகளின் சொர்க்கமாக விளங்கிவரும் முதுமலை, பல அரிய வகை விலங்கினங்கள், பறவைகள், நீர் வாழ்வுகள், தாவரங்கள் போன்றவற்றின் புகலிடமாகவும் உள்ளது. மேலும், பழங்குடி மக்களின் வாழ்வாதாரமாகவும் இருந்து வருகிறது.

இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த கானகம் பொருளாதாரத்துக்கும், சமூக நல வாழ்வுக்கும் அளிக்கும் சுற்றுச்சூழல் சேவை பங்களிப்பு குறித்து மதிப்பீடு செய்ய முதல் முறையாகத் திட்டமிடப்பட்டது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநரின் மேற்பார்வையில், மேகாலயா மாநிலம், பர்னிஹாட் மத்திய வனச் சேவை மையத்தைச் சேர்ந்த பயிற்சி உதவி வனப் பாதுகாவலர் சீனிவாசன், இந்த மதிப்பீடு குறித்த ஆய்வை முதல் முறையாக மேற்கொண்டார்.
இந்த ஆய்வில், ``நீலகிரி உயிர்க்கோள காப்பகத்தில் ஒரு பகுதியாக இருக்கும் முதுமலை, பல்லுயிர் வளம் நிறைந்த பகுதியாகவும், நாட்டில் புலி மற்றும் யானைகளின் அதிகளவு வசிக்கக் கூடிய பகுதிகளில் ஒன்றாகவும் விளங்கி வருகிறது. புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு பல்வேறு வனவள குறியீடாக உள்ளது.

இந்த வனங்கள் மண் வள பாதுகாப்பு, வளிமண்டலத்தின் காலநிலை மற்றும் வாயுக்களின் சமநிலையை சீராக்க உதவுகின்றன, புலிகள் காப்பகத்தின் மூலம் உள்ளூர் மக்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கம், கால்நடைகளுக்குத் தீவனம், கார்பன் அளவைக் கட்டுப்படுத்துதல், நீர் வழங்கல், ஊட்டச்சத்துக்களைத் தக்கவைத்தல், உயிரினங்களுக்கான வாழ்விடம், உயிரியல் கட்டுப்பாடு, மகரந்தச் சேர்க்கை, பொழுதுபோக்கு, எரிவாயு ஒழுங்குமுறை போன்ற நன்மைகளை வழங்குவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இவற்றின் பொருளாதார மதிப்பு ஆண்டுக்கு ரூ.4,199.55 கோடி மற்றும் காப்பகத்தில் உள்ள பல்வேறு வகை மரங்கள் போன்றவற்றின் மதிப்பு ஆண்டுக்கு ரூ.10,454.06 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

பல்லுயிர் முக்கியத்துவம் வாய்ந்த முதுமலை புலிகள் காப்பக வனங்கள் அளிக்கும் சுற்றுச்சூழல் சேவைகளின் பொருளாதார மதிப்பு ஆண்டுக்கு ரூ.14,650 கோடி என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் கிருஷ்ணகுமார் கவுசல் விவரிக்கையில், ``வனங்கள் வழங்கும் சுற்றுச்சூழல் சேவைகளுக்கு பண மதிப்பைக் கொடுப்பதன் மூலம், ஒரு அளவை நிர்ணயிக்க முடியும், இதனால் நமது காடுகள் எவ்வளவு மதிப்புமிக்கவை என்பதை மக்களிடம் கொண்டு செல்ல முடியும்.

இந்த மதிப்பீடு, வனங்கள் அதன் பலன்கள் குறித்து சரியான புரிதல் மற்றும் விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்த மதிப்பீடுகள் புலிகள் காப்பகங்கள் என்பது அவற்றின் வெறும் வாழ்விடங்கள் என்பதையும் தாண்டி, இவற்றின் மதிப்பு மற்றும் அவசியம் குறித்து புரிந்துகொள்ள உதவும்" என்றார்.