செயற்கை மழை பொழியும் `மழை மரம்...' வித்தியாசமான விழிப்புணர்வில் அசத்தும் கரூர் விவசாயி!

சும்மா, 'மரம் வளர்த்தால், மழை பெய்யும்'னு சொன்னா, மக்களுக்கு அது அவ்வளவு தீவிரத்தை ஏற்படுத்தாது. அதனால், மரம் மூலம் மழைபொழிய வைத்து, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு நினைச்சேன்.
வேலம் மரக்கிளைகளில் பிளாஸ்டிக் குழாய் மூலம் கனெக்ஷன் ஏற்படுத்தி, சென்சார் முறையில் மழை பொழிவதுபோல் அமைப்பை செய்து, மரங்களின் அவசியம் பற்றி மாணவர்களுக்கு வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஒருவர்.

கரூர் மாவட்டம், க.பரமத்தி ஒன்றியத்தில் இருக்கிறது கணக்குப் பிள்ளைபுதூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லமுத்து. இயற்கை விவசாயம் செய்து வருகிறார். தனது வீட்டைச் சுற்றி இயற்கைச் சூழலை செம்மைப்படுத்தியிருக்கிறார். அதோடு, வீட்டைச் சுற்றி மூலிகைச் செடிகள், தேனி வளர்ப்பு, சிறிய அளவிலான உணவுக்காடு என்று ஒரு மாடல் பண்ணைபோல் அமைத்துள்ளார். இதைப் பார்க்க, பள்ளி, கல்லூரி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள், குழந்தைகள் எனப் பலரும் வருகை தருகின்றனர்.
அப்படி, தனது பண்ணையைப் பார்க்க வருகைதரும் மாணவர்களுக்கு, மழை வழங்குவதில் மரங்களின் அவசியம் குறித்து உணர்த்த, வித்தியாசமான முயற்சியை செய்திருக்கிறார். தனது வீட்டின் அருகில் உள்ள, 25 ஆண்டுகள் பழைமையான வேலம் மரக்கிளைகளில், பிளாஸ்டிக் குழாய்களை அமைத்திருக்கிறார். அதோடு, மரத்தின் மேற்கு பக்கம் சென்சார் ஒன்றையும் அமைத்திருக்கிறார்.

மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்களை, தண்ணீர் டேங்கில் இணைத்துள்ளார். மாணவர்கள் அந்த மரத்தில் இருக்கும் சென்சாரை கிராஸ் செய்யும்போது, ஆட்டோமேட்டிக்காக டேங்கில் இருந்து பம்ப் ஆகும் தண்ணீர், மரக்கிளைகளில் அமைக்கப்பட்ட பிளாஸ்டிக் குழாய்கள் வழி சென்று, அந்த குழாய்களில் போடப்பட்ட நுண்ணிய துளைகளின் வழியாக, மழைபெய்வதுபோல் கீழே விழுகிறது.
மாணவர்கள் சென்சாரைவிட்டு அகன்றாலும், 10 நொடிகள் வரை தண்ணீர் மழைபோல் கீழே பொழிகிறது. அந்த மரத்தைச் சுற்றி வெய்யில் அடிக்க, மரத்தின் அடியில் மட்டும் திடீரென மழை பெய்வதால், ஒருகணம் மாணவர்கள் நிஜ மழையோ என்று மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போகிறார்கள். இதன்மூலம், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பின் அவசியத்தை உணர்த்துவதாக செல்லமுத்து சொல்கிறார்.
இதுகுறித்து, செல்லமுத்துவிடம் பேசினோம்.
"நான் 30 வருஷமா இயற்கை விவசாயம் செஞ்சுகிட்டு வர்றேன். கொஞ்சம் கொஞ்சமாக க.பரமத்தி பகுதி வறட்சியான பகுதியா மாறி, இப்ப நிலைமை ரொம்ப மோசமாயிடுச்சு. கடந்த நான்கு வருடங்களாக தமிழகத்திலேயே அதிகம் வெயில் அடிக்கும் பகுதியா, க.பரமத்தி பகுதி மாறிடுச்சு. மழையும் இங்கு அதிகம் பெய்யாது. அதற்கு காரணம், இங்கு அதிகமாக கல்குவாரிகள் இயங்கி வருவதும் மரங்களின் அளவு குறைந்துபோனதும்தான். அதனால், என் பண்ணையைப் பார்வையிட வரும் மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் மரங்களின் முக்கியத்துவத்தைப் பற்றி உணர்த்த நினைத்தேன். சும்மா, 'மரம் வளர்த்தால், மழை பெய்யும்'னு சொன்னா, அவங்களுக்கு அது அவ்வளவு தீவிரத்தை ஏற்படுத்தாது.

அதனால், மரம் மூலம் மழை பொழிய வைத்து, அதன்மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்னு நினைச்சேன். அதற்காகத்தான், வேலம் மரத்தில் இந்த ஏற்பாட்டை செய்தேன். உண்மையில் மாணவர்களிடம் இது பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கு. 'நாங்க எங்க பள்ளி, வீட்டு வளாகங்களில் மரங்களை வளர்க்கப்போறோம்'னு சொல்லிட்டுப் போறாங்க. அதேபோல், இந்த வேலம் மரத்தைச் சுற்றி, புல்லை நட்சத்திர வடிவில் அமைச்சு, மரத்தைச் சுற்றி அரசு, வன்னி, ஈட்டி, கருங்காலி, சக்கைபலானு 27 நட்சத்திர மரக்கன்றுகளையும் நட்டிருக்கிறேன். இதைச் சுற்றி வந்தால், 27 நட்சத்திரங்களையும் சுற்றிய பலன் கிடைக்கும்னு சொல்றாங்க. இப்படி, பல்வேறு வகையில் மரங்களின் அவசியம் குறித்து விழிப்புணர்வை தொடர்ந்து ஏற்படுத்திட்டு வர்றேன்" என்றார்.