``தமிழகத்தில் ஐந்தில் ஒரு தாவரம் அழியும் நிலையில்..!" - அரசு பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு

இந்திய தாவரவியல் ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் 625 தாவரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 133 தாவரங்கள் அருகிவரும் சூழலில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அருகி வரும் தாவரங்களின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு தாவரங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு. அதில் மத்திய மாநில சுற்றுச்சூழல் துறை செயலர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த புஷ்பவனம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், "பல்லுயிர் பெருக்கம் கொண்ட இந்தியா இயற்கையின் பன்முகம் கொண்டவை. கிட்டத்தட்ட தாவர இனங்கள் மட்டும் 45,000 உள்ளன. இதில் 40% வெளிப்படையாகத் தெரிந்துள்ளது. 60% தாவரங்கள் பற்றி அறியப்படாமல் உள்ளது. இந்தியாவில் குறிப்பாக, அதிகப்படியான தாவரங்கள் தமிழகத்தையே சாரும்.

இந்தியாவில் அழியக்கூடிய நிலையில் இருக்கும் தாவரங்கள் குறித்து 1989 முதல் 1992 வரை இந்திய தாவரவியல் ஆய்வுக்குழு நடத்திய ஆய்வில் 625 தாவரங்கள் அழியும் தருவாயில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 133 தாவரங்கள் அருகிவரும் சூழலில் இருப்பதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அழியும் தருவாயில் உள்ளவற்றுள் தமிழகத்தில் ஐந்தில் ஒரு தாவரம் உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் அழியக்கூடிய நிலையில் 6 தாவர இனங்கள் இருக்கின்றன.
இதுபோன்று அழியும் தருவாயில் உள்ள தாவர இனங்களைக் காப்பாற்றுவதற்காக வனவிலங்கு செயல்திட்டம் 2017 - 2031 அமல்படுத்துவதன் மூலம் அழியும் தருவாயில் உள்ள தாவர இனங்களைக் காப்பாற்ற முடியும். இதுகுறித்து மெயில் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குத் தகவல் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம் 1972-ன் படி தற்போதைய நிலையில் அழியும் தருவாயில் உள்ள தாவர இனங்கள் குறித்து, ஆய்வு மேற்கொண்டு அழியும் தருவாயில் உள்ள தாவரங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனு குறிப்பிட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய, மாநில சுற்றுச்சூழல் துறை செயலர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.