நீலகிரி மாவட்டம், குன்னுாா் - மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விரிவாக்கப் பணிகளால் யானைகள் சாலையைக் கடக்க முடியாமல் தவிர்ப்பதாகப் புகார்கள் எழுந்தன. இந்த விவகாரத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கையிலெடுத்து தாமாகவே முன்வந்து விசாரணை நடத்தியது. உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவினர், கடந்த மாதம் இந்தப் பகுதியில் நேரில் ஆய்வு செய்தனர். யானைகள் எந்தவித இடையூறும் இல்லாமல் சாலையைக் கடந்து வனத்துக்குள் செல்லும் வகையில் பணிகளை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டுச் சென்றனர்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மேலும், யானைகள் சாலையைக் கடக்கும் பகுதிகளை ஆய்வு செய்து அந்த இடங்களில் வேகத்தடைகளை அமைக்குமாறும் அறிவுறுத்திச் சென்றனர். இதைத் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டதில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பகுதியில் 9 இடங்களில் யானைகள் சாலையைக் கடப்பதைக் கண்டறிந்தனர். 8 இடங்களில் 16 வேகத்தடைகளை நெடுஞ்சாலைத்துறையினர் அமைத்துள்ளனர்.
இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், ``தேசிய நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகள் அமைப்பது கிடையாது. யானைகள் சாலையைப் பாதுகாப்பாக கடக்க வேண்டும் என்பதைக் கருத்தில் கொண்டு தற்போது முதல் முறையாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் செல்வதற்கு விசாலமான வழியை ஏற்படுத்தவும், யானைகள் சாலையைக் கடக்கும் இடங்களில் வேகத்தடை அமைக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

யானைகள் கடக்கும் 9 இடங்களில் 18 வேகத்தடைகள் அமைக்க முடிவு செய்தோம். தற்போது 8 இடங்களில் 16 வேகத்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்களில் விரிவாக்கப் பணி இன்னும் நிறைவடையவில்லை. பணி முடிந்ததும் அமைக்கப் படும். இதனால், யானை உள்ளிட்ட வன விலங்குகள் விபத்தின்றி சாலையைக் கடந்து செல்ல முடியும்" என்றனர்.