வனப்பகுதிகளில் அதிகரிக்கும் குற்றங்கள்... அறிக்கை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!
வன விலங்கு வேட்டை, வன விலங்குகளின் பாகங்கள் கடத்தப்படுதல் போன்ற குற்றங்களைக் குறைக்கக்கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருச்சியைச் சேர்ந்த நித்திய சௌமியா சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் அளித்த மனுவில், ``சுமார் 3,305 கிலோ மீட்டர் காடுகள் தமிழகத்தில் உள்ளன. ஏராளமான உயிரினங்கள் இந்த வனப்பரப்பை வாழ்விடமாகக் கொண்டு வசித்து வருகின்றன. ஆனால் பல், தந்தம், ஓடு போன்ற பிரத்யேகப் பாகங்களுக்காக இந்த உயிரினங்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு இந்தியாவில் சட்டங்கள் கடுமையாக இல்லாததே காரணம், இந்தியாவில் 2009 முதல் 2013-ம் ஆண்டு வரை 3,000 எறும்புத் தின்னிகள் ஓடுகளுக்காகக் கொல்லப்பட்டுள்ளன.

25 கடத்தல் காரர்களிடமிருந்து 5,000 கிலோ ஓடுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எறும்புத் தின்னிகள் பாதுகாக்கப்பட உயிரினங்களில் அட்டவணை ஒன்றில் இடம் பெற்றுள்ளன. மருத்துவப் பயன்பாட்டுக்காக ஏறும்புத் தின்னியின் ஓடுகள் அதிகப்படியாக சீனா போன்ற நாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. மேலும், காடுகளில் உள்ள அரிய வகை மரங்களும் சட்டவிரோதமாகக் கடத்தப்படுகின்றன. காடுகளில் கஞ்சா செடிகள் வளர்த்து கடத்தப்படுவதும் சமீப காலமாக அதிகமாகி வருகிறது.
குறிப்பாக, கடந்த ஜனவரி 5-ம் தேதி 5.75 கிலோ எடையுள்ள எறும்புத் தின்னி ஓடுகள், 6 சிறுத்தை நகங்கள், 6 கிலோ எடையுள்ள 2 யானையின் தந்தங்கள் ஆகியவை வனத்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. அதேபோல் கடந்தாண்டு மே 20-ம் தேதி கொடைக்கானல் காடுகளில் 1 கிலோ கஞ்சா பயிர்களை வனத்துறையினர் கண்டுபிடித்து அழித்துள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வழக்கை சி.பி.ஐ அல்லது சி.பி.சி.ஐ.டி விசாரிக்க உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் பல்வேறு கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து நீதிபதிகள் வழக்கு குறித்து மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை துறை இயக்குநர், தமிழ்நாடு வனவிலங்கு குற்ற கட்டுப்பாட்டு பணியகத்தின் இயக்குநர் ஆகியோரை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை மார்ச் 1-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.