இரட்டைக்கொலைக்கு காரணமான கரூர் மாவட்டம், முதலைப்பட்டி ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு மீண்டும் ஏரியை சீரமைக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம், இனாம்புலியூரைச் சேர்ந்தவர்கள் வீரமலை மற்றும் அவரின் மகன் நல்லதம்பி. சமூக ஆர்வலரான இவர்களுக்கு, கரூர் மாவட்டம் இனாம்புலியூரில் மூன்று ஏக்கர் நிலம் உள்ளது. அவற்றில் ரோஜா மற்றும் மல்லிப்பூக்களை சாகுபடி செய்துவந்தனர். வீரமலை முதலைப்பட்டியில் உள்ள அய்யனார் கோயிலில் பூசாரியாகவும் இருந்துவந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், முதலைப்பட்டியில் இருந்த 198 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரி நூற்றுக்கணக்கானவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு, விவசாய நிலங்களாக மாற்றப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதை எதிர்த்த வீரமலை, வழக்கறிஞர் மூலமாக ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்ற, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின் உத்தரவுபடி, கடந்த 26-ம் தேதி வருவாய்த்துறை அதிகாரிகள் முதலைப்பட்டி ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட 40 ஏக்கர் இடத்தை அளந்து, கல் நட்டுள்ளனர். அப்போது, வீரமலையும், அவரின் மகன் நல்லதம்பியும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடங்களைக் காட்டினார்களாம். இதனால், கோபமான ஆக்கிரமிப்பாளர்கள், ஜெயகாந்தன் தலைமையிலான ஆறுபேர் கொண்ட அடியாட்களைக் கொண்டு, கடந்த 29-ம் தேதி வீரமலையையும், நல்லதம்பியையும் கொடூரமாகக் கொலை செய்தனர்.

ஏரியை மீட்கப் போராடிய சமூக ஆர்வலர்கள் கொல்லப்பட்ட விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இதற்கிடையில், `ஏரி விஷயத்தில் இவ்வளவு மெத்தனம் ஏன், இரண்டு உயிர்கள் பலிபோகும் அளவுக்கு அதிகாரிகளும், காவல்துறையும் அசட்டையாக இருந்துள்ளனர்' என்று மதுரை உயர்நீதிமன்றம் கண்டித்தது. அதோடு, பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் இந்த வழக்கை தாமாக எடுத்துக்கொண்டது. இத நிலையில், திருச்சி மண்டல ஐ.ஜி, `இந்த வழக்கை சரியாக விசாரிக்கவில்லை' என்று குற்றம்சாட்டி, குளித்தலை காவல்நிலைய இன்ஸ்பெக்டர் பாஸ்கரனை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார். இந்தக் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஆறுபேர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்தக் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக சொல்லப்படும் ஜெயகாந்தனையும் போலீஸார் கைது செய்தனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இந்த நிலையில், ஆக்கிரமிப்பை அகற்ற உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஆணை பிறப்பித்தையடுத்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவின் பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், குளித்தலை கோட்டாட்சியர் லியாகத், குளித்தலை வட்டாச்சியர் செந்தில் ஆகியோர் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முதலைப்பட்டி ஏரியை, இரு தினங்களுக்கு முன் பார்வையிட்டு, எல்லைகளை அளந்து சென்றனர். இந்த நிலையில், ஜே.சி.பி இயந்திரம் மற்றும் 4 லாரிகளைக் கொண்டு ஆக்கிரமிப்பினை அகற்றி, கரைகள் பலப்படுத்தப்பட்டு மீண்டும் ஏரியை உருவாக்கும் பணி மாவட்ட வருவாய் அலுவலர் சூர்யபிரகாஷ், கோட்டாட்சியர் லியாகத் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் குளித்தலை வட்டாச்சியர் செந்தில், தோகைமலை பி.டி.ஓ ராணி, ஏ.பி.டி.ஓ ராஜேந்திரன், கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரும் உடனிருந்தனர். ஆக்கிரமிக்கப்பட்டுள்ள ஏரியை மீட்கும் பணி என்பதால், அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது. தொடர்ந்து, அடுத்தடுத்த நாள்களும் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடைபெற இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ``ஏரியை ஆக்கிரமித்துள்ளவர்களில் பலர் பட்டா வாங்கியதாகத் தெரிகிறது. அவற்றின்மீது கோர்ட் வழிகாட்டுதலின்படி செயல்பட்டு, நடவடிக்கை எடுப்போம்" என்று வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.