செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டுச் சிறை! - சென்னை சிறப்பு நீதிமன்றம் #NowAtVikatan

07-04-2021 | இன்றைய முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பு..!
செக் மோசடி வழக்கு: சரத்குமார், ராதிகாவுக்கு ஓராண்டுச் சிறை!

செக் மோசடி வழக்கில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார், அவரின் மனைவி ராதிகாவுக்கு ஓராண்டுச் சிறைத் தண்டனை விதித்தது சென்னை சிறப்பு நீதிமன்றம். ரேடியன்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
புதிய உச்சத்தில் தினசரி கொரோனா பாதிப்பு!
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. தினமும் புதிய உச்சத்தில் பாதிப்புகள் பதிவாகிவருகின்றன. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிதாக 1,15,736 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 630 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்று பாதிப்புடன் 8,43,473 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதற்கிடையே இன்று (ஏப்ரல் 7) உலக சுகாதார தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி பிரதமர் மோடி பதிவிட்டிருக்கும் ட்விட்டர் பதிவில், ``உயர்தர மற்றும் குறைந்த விலையில் சுகாதார சேவையை மக்கள் பெறுவதை உறுதிசெய்ய இந்திய அரசு ஆயுஷ்மான் பாரத் மற்றும் பிரதமர் ஜனஷதி யோஜனா உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்த உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை இந்தியா நடத்திவருகிறது.
மேலும், இந்த உலக சுகாதார தினத்தில் மாஸ்க் அணிதல், தவறாமல் கைகளைக் கழுவுதல், பிற நெறிமுறைகளைப் பின்பற்றுவது உள்ளிட்ட அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்வதன் மூலம் கொரோனாவுடன் போராடுவதில் கவனம் செலுத்துவோம்.
அதேநேரத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். உலக சுகாதார தினம் என்பது நமது பூமியை ஆரோக்கியமாக வைத்திருக்க இரவு பகலாக உழைக்கும் அனைவருக்கும் நன்றியையும் பாராட்டையும் மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு நாள். சுகாதாரத்துறையில் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளை ஆதரிப்பதற்கான நமது உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதற்கான ஒரு நாள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.